இந்து தர்மம்: வழிபாட்டுப் பிரிவுகள் (பகுப்புகள்):

கற்ப கோடி ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கும் நமது இந்து சமயத்திற்கு இறைவன் என்பவன் ஒருவனே, அந்த இறைவனை பிரம்மம் என்றும் பரம்பொருள் என்றும் வேதங்கள் சுட்டும். ஆன்மாக்கள் உய்வு பெரும் பொருட்டு கருணைப் பெருங்கடலான இறைவன் சில முக்கியத் திருவடிவங்களில் தோன்றி அருள்கின்றான். நால்வேதங்களை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்திற்கு ஆதிமுதலே ஆறு வழிபாட்டு பிரிவுகள் (பகுப்புகள்) இருந்து வந்துள்ளது தெளிவு, இனி அவற்றினைக் காண்போம். சைவம்: ஆதிப் பரம்பொருளாகவும், முக்கண் முதல்வராகவும், பரஞ்சுடராகவும் விளங்கியருளும் சிவபெருமானைப் போற்றும் முத்தி மார்க்கம்.

வைணவம்: சிவபரம்பொருளின் இடபாகத்தில் கோயில் கொண்டருள்பவராகவும், பரவாசுதேவராகவும் விளங்கியருளும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியை உபாசிக்கும் சீர்மிகு மார்கம்.
சாக்தம்: சிவபரம்பொருளின் அருட்சக்தியாகவும், அச்சுத சகோதரியாகவும், அனைத்து வேதத் தலைவியாகவும் விளங்கியருளும் ஆதிபராசக்தியை வழிபடும் உத்தம மார்க்கம்.
காணாபத்தியம்: பிரணவ சுவரூபரான விநாயகக் கடவுளைத் தொழுதுச் சிவமுத்தி அடைந்துய்யும் வேத மார்க்கம்.
கௌமாரம்: சிவசுவரூபியான ஆறுமுக தெய்வத்தைப் பணிந்தேத்திப் பிறவிப் பெருங்கடலினைக் கடந்துய்யும் அற்புத மார்க்கம்.
சௌரம்: சூரிய தேவனை உபாசிக்கும் மார்க்கம், இப்பிரிவு தற்பொழுது வழக்கத்தில் பெரிதாக இல்லை, மேற்குறித்துள்ள ஐந்து பிரிவுகளோடு இம்மார்க்கம் முற்றிலும் இணைந்து விட்டது எனலாம், மகாபாரத கர்ணன் இப்பிரிவினைச் சார்ந்தவன்.
'நான்கு வேதங்கள்; உபநிடதங்கள்; இதிகாசங்கள்; புராணங்கள்; பாவ புண்ணியச் செயல்கள் மற்றும் அதன் விளைவுகளைக் குறிக்கும் கர்ம வினையின் வகைகள்; மறுபிறவிக் கோட்பாடுகள்; யுக தர்மங்கள்; பிறவியின் பயனான முத்தி வகைகள்' இவை அனைத்துமே மேற்குறித்துள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் பொதுவானவை. இருப்பினும் இவ்வழிபாட்டு முறைகளுக்குத் தனித்தனியே 'மூல மந்திரங்கள், பூஜை முறைகள், அருளார்களின் திருப்பாடல்கள், ஆலயங்கள், ஆகமங்கள், விரத நாட்கள், விழா நாட்கள், வழிவழி ஆச்சாரியர்களைக் கொண்டொழுகும் குரு பரம்பரை' இவைகள் உண்டு. ஆன்மாக்கள் தத்தம் மனங்களின் ருசி பேதங்கள், வளரும் சூழல், உள்ளச் சீரமைப்பு இவைகளுக்குத் தக்கவாறு, தங்கள் மனதில் எளிதில் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒரு இறை வடிவத்தைத் தேர்ந்தெடுத்து உபாசித்து, இம்மானுடப் பிறவியின் ஒரே ஆன்ம குறிக்கோளான சிவமுத்தியினை அடைந்துய்யும் பாதையில் பயணிக்கின்றனர், உய்வு பெறுகின்றனர் (சிவ சிவ)!!!

No comments:

Post a Comment