புலால் மறுத்தல் (திருமூலரின் எச்சரிக்கை):

(புலால் மறுத்தல்: முதல் தந்திரம்):
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே!!

ஐயறிவு வரையிலான உயிரினங்களின் பரிதாபக் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தைப் 'பொல்லாப் புலால்' என்று குறிக்கின்றார் திருமூல நாயனார். பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றிச் சிறிதும் வருத்தமின்றி அவ்வுயிர்களின் புலாலினைச் சுவைத்து உட்கொள்பவர் ஐயத்திற்கு இடமின்றி 'நரக வேதனைக்கு இணையான தாங்கொணா துயரத்தில் உழல்வர்' என்றும் எச்சரிக்கின்றார்.

தங்களைத் தற்காத்துக் கொள்ளும் சக்தியின்றி, கதியற்ற நிலையில், கடும் துயர் மற்றும் அச்சத்துடன் கதறிப் பதறி உயிர் துறக்கும் பிராணிகளின் மரண ஓலம் அக்கணமே தீய வினையாக உருமாறி அவ்வுயிரைக் கொல்பவர் மற்றும் உட்கொள்பவர் யாவரையும் ஐயத்திற்கு இடமின்றிப் பற்றுகின்றது. 

இப்புவியில் எது பொய்ப்பினும், பரிபூரணச் சிவஞானம் கைவரப் பெற்ற சிவயோகிகளின் திருவாக்கு ஒரு பொழுதும் பொய்ப்பதில்லை. அசைவம் உணவல்ல; உயிர் என்று உணர்ந்து அவற்றினை அறவே தவிர்த்துச் சிவகதி சார்வோம் (சிவாய நம)!!!

No comments:

Post a Comment