சைவத் திருமுறைகளில் ரிக் வேதச் சிறப்பு:

'சைவ சமயத்தின் அடிநாதமான ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களுள், ரிக் வேதத்தின் ஏற்றத்தினை நால்வர் பெருமக்களும் அருணகிரிப் பெருமானும் எவ்வாறு பதிவு செய்துள்ளனர்' என்பதனை இப்பதிவில் உணர்ந்துத் தெளிவுறுவோம், 

'பூவார் கொன்றை' என்று துவங்கும் சீகாழித் திருப்பதிகத்தின் 10ஆம் திருப்பாடல்:
சிவபெருமான் ரிக் வேத மந்திரங்களில் முழுவதுமாய் நிறைந்து விளங்கும் தன்மையினை 'இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்' என்று ஞானசம்பந்தப் பெருமான் போற்றுகின்றார், 
-
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவரவர் போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்தையரே.

திருப்பேரெயில் தல தேவாரத்தின் 6ஆம் திருப்பாடல்:
ரிக் வேத மந்திரங்களால் தொழுபவர்களின் துயரினைச் சிவபெருமான் போக்கி அருள்வதாகப் பதிவு செய்துப் போற்றுகின்றார் நாவுக்கரசு சுவாமிகள் ('இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்'),  
-
திருக்கு வார்குழல் செல்வன் சேவடி
இருக்கு வாய்மொழியால் தனையேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்களாற்றறப்
பெருக்குவாரவர் பேரெயிலாளரே

திருக்கானாட்டுமுள்ளூர் தலத் திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடல்:
ரிக் வேதங்களை ஓதும் அந்தணர்கள் அத்தலத்தில் நிறைந்து விளங்கும் தன்மையினைப் பதிவு செய்கின்றார் சுந்தரர் ('இருக்குவாய் அந்தணர்கள்'),
-
செருக்குவாய்ப் பைங்கண் வெள்ளரவரையினானைத்
    தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்குவாய் மலரொக்கும் திருமேனியானை
    முன்னிலையாய் முழுதுலகமாய பெருமானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
    வேள்வியிருந்திருநிதியம் வழங்கு நகரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
    கானாட்டுமுள்ளூரில் கண்டுதொழுதேனே

திருவாசகத்தின் திருப்பள்ளியெழுச்சி 4ஆம் திருப்பாடல்: திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேதியர்கள் ரிக் வேத மந்திரங்களால் போற்றுவதாகப் பதிவு செய்கின்றார் மணிவாசப் பெருமான் ('இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்'), 
-
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
    தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
    திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டு கொண்டின்னருள் புரியும்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

'அருக்கு மங்கையர்' என்று துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்:
'சப்த ரிஷிகளான அகத்தியர்; அத்திரி; பரத்வாஜர்; கௌதமர்; ஜமதக்னி; வசிஷ்டர்; விஸ்வாமித்ரர் ஆகியோருக்கு முருகப் பெருமான் ரிக் வேத மந்திரங்களை உபதேசித்து அருளினான்' என்று அருணகிரிப் பெருமான் பதிவு செய்கின்றார்,  
..
இருக்கு மந்திரம் எழுவகை முனிபெற 
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில்வேளென்
...

No comments:

Post a Comment