இராமாயணம் பற்றிய வள்ளலாரின் பார்வை (திருஅருட்பா அகச்சான்றுகள்):

வள்ளல் பெருமானார் திருஅருட்பாவில் தில்லையுறைப் பரம்பொருளான ஸ்ரீநடராஜ மூர்த்தியையே அருட்பெருஞ்சோதியெனப் போற்றி எண்ணிறந்த திருப்பாடல்களை அருளியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றிருக்கும் அருட்பாவில், 5ஆம் திருமுறையில் ஸ்ரீராமச்சந்திரப் பிரபுவிற்கென அதி அற்புதமான இரு பாடல் தொகுப்புகளையும் அருளியுள்ளார் என்பது ஒரு அழகிய ஆச்சரியமான குறிப்பு. அமிழ்தினும் இனிய அத்திருப்பாடல்களுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

இராமநாம சங்கீர்த்தனம்' எனும் பாடல் தொகுப்பு ஒரு திருப்பாடலோடும், 'இராமநாமப் பதிகம்' எனும் தொகுப்பு 10 திருப்பாடல்களோடும் அமையப் பெற்றுள்ளது.

இராமநாம சங்கீர்த்தனம்:
காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ரதரநீள்
சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோதராய நமஓம்
நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே!!!

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இராமேஸ்வரப் பகுதியிலிருந்து நெடுங்கடலில் இலங்கை வரையிலும் மலைக்கற்களால் அணைகட்டிய நிகழ்வினையும், மறம்பழுக்கும் (கொடிய பாவங்களையே செய்து வந்த) இராவணனின் பத்து தலைகளையும் வெட்டி வீழ்த்திய வீரச்செயலையும் போற்றி அந்நிகழ்வுகளுக்குச் சான்றுரைக்கின்றார்.
-
இராமநாமப் பதிகம் - 7ஆம் திருப்பாடல்:
அறம்பழுக்கும் தருவே,என் குருவே, என்றன்
ஆருயிருக்கொரு துணையே, அரசே, பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக்கு அணையளித்த நிலையே, வெய்ய
மறம்பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டோர்
வாளினால் பணிகொண்ட மணியே, வாய்மைத்
திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றிமற்றோர் செயலிலேனே.
-
இராமநாமப் பதிகம் - 2ஆம் திருப்பாடல்:
கலைக்கடலே, கருணைநெடும் கடலே, கானம்
கடந்ததடம் கடலே, என் கருத்தே, ஞான
மலைக்கண் எழும் சுடரே,வான் சுடரே, அன்பர்
மனத்தொளிரும் சுயஞ்சுடரே, மணியே, வானோர்
தலைக்கண்உறு மகுட சிகாமணியே, வாய்மைத்
தசரதன்தன் குலமணியே, தமியேன் உள்ள
நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ளலே, என்
நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்திலாயே

No comments:

Post a Comment