தெய்வத் தமிழ் மொழியும் தசரத மைந்தனும் (வியப்பூட்டும் கம்ப இராமாயணக் குறிப்புகள்):

கைகேயி அன்னையின் வாக்கினைத் தசரதனின் ஆணையென ஏற்கும் கோசலை மைந்தன் 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்று அக்கணமே கானகம் செல்ல முனைகின்றான். எனினும் இலக்குவனோ தமையனுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி கண்டு வெகுண்டு யாவரையும் அழித்தொழிக்கும் எண்ணத்துடன் வில்லினில் நாணொலி எழுப்புகின்றான், அண்டங்கள் யாவும் நடுநடுங்குகின்றன. அச்சமயத்தில் இராகவன் பல்வேறு அறவுரைகளால் இலக்குவனை அமைதியுறச் செய்வதாகக் கம்ப இராமயணம் பதிவு செய்கின்றது, இனி இது குறித்த திருப்பாடலொன்றினை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(அயோத்தியா காண்டம் - நகர் நீங்கு படலம்):
நன்சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான்!!!

(சுருக்கமான பொருள்):
இலட்சுமணா, இனிய சொற்களை மட்டுமே சொல்லி இதுநாள் வரையிலும் நமை வளர்த்த தந்தையின் வாக்கினை மீறி அரசாள முனைவது எந்தவொரு கோணத்திலும் அறமாகாது! எம்மை 'தாய், தந்தை, தலைவன், இறைவன்' என்று அனைத்துமாகவும் ஏற்றுள்ளதாகப் பலமுறை கூறுவாயே, அவையாவும் உண்மையெனில் இப்பொழுது எம்முடைய சொற்களை மீறி நீ அடைந்து விடக்கூடிய பயன் தான் என்ன? என்று அறவுரை பகர்கின்றான் இராமன்.

திருப்பாடலின் இறுதி வரியில் 'வடமொழி; தென்மொழியாகிய தமிழ்' ஆகிய இரண்டிலும் பெரும் புலமை பெற்றிருந்தான் ஸ்ரீராமன் என்று குறிக்க வரும் கம்பர், வடமொழியில் கூட எல்லை வரையில் மட்டுமே புலமை பெற்றிருந்தான் என்று கூறிப் பின் தென்மொழியாகிய தெய்வத் தமிழ் மொழியில் 'எல்லையையும் கடந்த புலமை பெற்றிருந்தான்' என்பதனைத் 'தென்சொல் கடந்தான்' எனும் சொற்களால் பதிவு செய்கின்றார்.

No comments:

Post a Comment