இராமச்சந்திர மூர்த்தி தென்னாட்டு தெய்வமா வடநாட்டு தெய்வமா? கவிச் சக்கரவர்த்தியின் விடை:

மரண வேதனையிலிருக்கும் வாலி தன் மார்பினைத் துளைத்து நிற்கும் அம்பில் 'இராம' எனும் திருநாமம் பொறித்திருத்தலைக் காண்கின்றான், இதனைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் பின்வரும் அற்புதத் திருப்பாடலால் காட்சிப்படுத்துகின்றார்.

கம்ப இராமாயணம்: வாலி வதைப் படலம்:
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்.

பாரத தேசத்திற்குள்ளாகவே வடநாட்டு தெய்வம்; தென்னாட்டு தெய்வம் என்று பிரிவினை வெறி கொண்டு பிதற்றித் திரிவோருக்குப் பதில் கூறுமாற் போலே இத்திருப்பாடல் அமைந்துள்ளது. 'மும்மை' எனும் பதம் 'பூமி; பூமிக்கு மேலுள்ள 6 உலகங்கள்; பூமிக்கு கீழேயுள்ள அதல விதல...பாதாளம் வரையிலான 7 உலகங்கள்' இவையாவையுமே ஒருசேரக் குறிக்க வந்தது. ஆதலின் ஈரேழு பதினான்கு புவனங்களுக்கும் 'இராம' என்பது ஒப்புவமையற்ற மூல மந்திரமாகத் திகழ்கின்றது என்று போற்றித் துதிக்கின்றார் கவிச் சக்கரவர்த்தி (சிவ சிவ!!!).

5100 வருடங்கள் பழமையான தமிழ்ப் பாசுரங்களில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி:

துவாபர யுகம் முடிவுற்றுக் கலியுகம் துவங்கி தற்பொழுது சுமார் 5100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கலி துவங்கி சரியாக 60 நாட்களுக்குள் அவதரித்த அருளாளர் 'சடகோபர்' எனும் நம்மாழ்வார். அவதாரத் தலம் 'தூத்துக்குடி மாவட்டத்திலிலுள்ள ஆழ்வார் திருநகரி எனும் திருக்குருகூர்'. பன்னிரு ஆழவார்களுள் முதன்மையானவராகப் போற்றப் பெறுபவர். ஒப்புவமையற்ற நமது இந்து தர்மத்தின் 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண' வேதங்களின் சாரங்களைத் தமிழ்ப் பாக்களாக்கித் தருவதே இப்புண்ணிய சீலரின் அவதார நோக்கம். 'வேதம் தமிழ்செய்ய வந்த மாறன்' என்றிவரைக் கொண்டாடுவர். இப்பெருமகனார் 'திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி' ஆகிய நான்கு அற்புதப் பிரபந்தத் தொகுப்புகளை அருளியுள்ளார்.

இனி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றினைக் காண்போம், 'கற்க வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்யமான சரிதங்களையே அன்றி வேறெதுவுமில்லை' என்று பின்வரும் திருப்பாடலில் போற்றுகின்றார்.

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!!!

ஸ்ரீராமர் பாலம் உண்மையிலேயே கடலில் உருவாக்கப் பெற்றதா?

அருணகிரிப் பெருமான் 'துடிகொள் நோய்களோடு வற்றி' என்று துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில் 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருஇராமேஸ்வரத் தலத்திலுள்ள கடற்பரப்பில் பெரும் மலைக் கற்களாலான பாலமொன்றினை அமைத்துச் சென்று, இலங்கையினை அடைந்துக் கொடியவனான இராவணனைக் கொன்று வெற்றி வாகை சூடிய நிகழ்வினைப் பின்வரும் வரிகளில் பதிவு செய்கின்றார்,
-
கடிதுலாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி இகலூர்போய்க்
-
களமுறானை தேர் நுறுக்கி
     தலைகளாறு நாலு பெற்ற
          அவனை வாளியாலடத்தன் மருகோனே

மற்றுமொரு அகச்சான்றினையும் காண்போம், சிவபரம்பொருளின் திருவாக்காலேயே 'நாவுக்கரசர்' எனும் அற்புதத் திருநாமம் பெற்றுள்ள நம் அப்பர் சுவாமிகளும் இதே நிகழ்வினைத் தம்முடைய திருஇராமேஸ்வரம் தேவாரத் திருப்பதிகத்தின் பின்வரும் வரிகளால் ஆவணப்படுத்துகின்றார்.
-
கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கரும முற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மையின்றி
உடலிடை நின்றும் பேரா ஐவர்ஆட்டுண்டு நானே!!!

ஈனமிலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் (திருஞானசம்பந்தர் சான்றுரைக்கும் இராமயண நிகழ்வுகள்):

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 3):
மானன நோக்கியை தேவிதன்னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக்கன் உயிர் செற்றவன்
ஈனமிலாப் புகழண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன்பொருளாகி நின்றதொரு நன்மையே.
-
(பொருள்):
அன்னை சீதா தேவியை மாயையால் கானகத்திலிருந்து முறைகேடாகக் கவர்ந்து சென்ற அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய, குற்றம் சிறிதுமில்லாப் புகழினைக் கொண்ட அண்ணலான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி செய்வித்த திருஇராமேச்சுர லிங்க மூர்த்தியைப் போற்றுபவர்க்கு சிவஞானமும் அதன் பயனான முத்தியின்பமும் கிட்டும்.

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 4):
உரையுணராதவன் காமமென்னும் உறுவேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்தேத்திய
விரைமருவும் கடலோத மல்கு இராமேச்சுரத்து
அரைஅரவாட நின்றாடல் பேணும் அமம்மான்நல்லனே!!!
-
(சுருக்கமான பொருள்):
'காமமென்னும் உருவேட்கையான்' எனும் முதல் வரிமூலம் 'இராவணன் அன்னை சீதையை கடத்திச் சென்றது 'முறையற்ற காமத்தின் பொருட்டே' என்று சம்பந்தப் பெருமான் ஐயத்திற்கு இடமின்றிச் சான்றுரைக்கின்றார். 2ஆம் வரியில் 'இராவணனுடைய மலை போன்ற தோள்களைத் தன்னுடைய வில்லினால் அற்று விழுமாறு அழித்தொழித்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மகிழ்ந்தேத்திய இராமேச்சுரம்' என்று போற்றுகின்றார்.

இராவணனுக்கு கும்பகர்ணன் கூறிய அறிவுரை (பேசுவது மானம் இடைபேணுவது காமம்):

கும்பகர்ணன் தமையனான இராவணனுக்கு நன்னெறியினை பலவாறு எடுத்துரைக்கின்றான், அன்னை சீதையை நயவஞ்சகமாக அபகரித்து வந்தது மறை நெறிகளுக்குப் புறம்பானது என்று இடித்துரைக்கின்றான். "சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்" என்று இகழ்கின்றான். அனைத்துவித மரியாதைகளோடு அன்னை ஜானகியை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் சேர்ப்பித்து மன்னிப்பு வேண்டுவதொன்றே உய்யும் வழி என்று பகர்கின்றான். எனினும் அகந்தையின் உச்சத்திலிருந்த இராவணனோ இவையெதற்குமே செவிசாய்க்கவில்லை. இனி இக்காட்சி தொடர்பான கம்ப இராமாயணப் பாடலொன்றினையும் காண்போம்,
யுத்த காண்டம் - இராவணன் மந்திரப் படலம்:
ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்போம்
மாசில் புகழ் காதல் உறுவோம்; வளமை கூறப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று நம் கொற்றம்!!!

பொருள்:
தமையனே, ஒருபுறம் 'குற்றம் ஒரு சிறிதுமில்லாப் பிறிதொருவரின் தாரத்தின் மேல்' முறையற்ற மோகம் கொண்டு அம்மாதினைக் கடத்தி வந்து சிறை வைக்கின்றோம்! மற்றொரு புறமோ 'குற்றமில்லாத புகழ்' வந்தெய்த வேண்டும் என்றும் விரும்புகின்றோம். இது விந்தையன்றோ! நம் வார்த்தைகளில் தெரிவதோ வீரமும் மானமும், ஆனால் நம் செயல்களிலோ முறையற்ற காமமும் ஈனத்தன்மையுமே வெளிப்படுகின்றது. இவ்விதமான பழிச் செயல்களால் 'மானிடர்களுக்கு அஞ்சி வாழும் சிறுமை நிலையும்' நமக்கின்று எய்தியுள்ளது, நன்றாக இருக்கின்றது நமது அரசாட்சியும் கொற்றமும்!

இராவணன் அரக்கனா இல்லையா? தர்க்க ரீதியான ஆதாரபூர்வ விளக்கங்கள்:

இப்பதிவினைப் படிக்குமுன் ஒரு சிறு கேள்வி? நீங்கள் இறை மறுப்பாளரா? ஆம் எனில் இப்பதிவு உங்களுக்கானது அல்ல! தயவு கூர்ந்து தாம் சென்று வரலாம்!
திரேதாயுகத்தில், வடமொழியில் இராமாயணம் இயற்றியுள்ள வால்மீகி முனிவரை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்; கலியுகக் காலகட்டத்தில், 12ஆம் நூற்றாண்டில், தீந்தமிழில் இராமாயணம் புனைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பரையும் நாங்கள் முற்றிலும் மறுதலிப்போம்; இவர்கள் இருவருமே இராவணனை அரக்கனென்றுத் தவறாகச் சித்தரித்து விட்டனர் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவரா நீங்கள்? வாருங்கள் பதிவிற்குள் செல்வோம்! நீங்கள் சைவ சமயம் சார்ந்தவரா? ஆம் எனில் நிச்சயம் திருஞானசம்பந்தர்; திருநாவுக்கரசர்; சுந்தரர் ஆகிய குருநாதர்களின் திருவாக்கில் உங்களுக்குப் பரிபூரணமாய் நம்பிக்கையுண்டு தானே? சரி இனி திருநாவுக்கரசு சுவாமிகளின் இராமேஸ்வர தேவாரத் திருப்பாடலொன்றினைக் காண்போம், - வீரமிக்கெயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன் கூரமிக்கவனைச் சென்று கொன்றுடன் கடற்படுத்துத் தீரமிக்கான் இருந்த திருஇராமேச்சுரத்தைக் கோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே. - (சுருக்கமான பொருள்): 'வீரமிக்கு எயிறு காட்டி (அதாவது கோரைப்பற்கள் வெளியே தெரியும் படி), நெடிதுயர்ந்த உடலினைக் கொண்ட கூரம் மிக்கவனை (கொடுமை மிக்க அரக்கனாகிய இராவணனை), இலங்கைக்குச் சென்று அவனைக் கொன்று மீண்ட தீரம் மிக்கான் (பேராற்றல் பொருந்திய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி) வழிபட்டு உய்ந்த திருஇராமேச்சுரம்' என்று அப்பர் சுவாமிகள் குறிக்கின்றார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருக்கோளிலி தேவாரத்தில் "அரக்கன் முடிகரங்கள் அடர்த்திட்டஎம் ஆதிப்பிரான்" என்று 'இராவணன் கயிலை மலையையே பெயர்க்க முற்பட்ட பொழுதுச் சிவபரம்பொருள் தன் திருப்பாத விரலொன்றினால் சிறிது அழுத்தி, ஆயிரம் ஆண்டுகள் அவ்விடத்திலேயே சிக்கி அலறுமாறு செய்து, அரக்கனான இராவணனின் ஆணவத்தினை அழித்தொழித்த நிகழ்வினைக் குறிக்கின்றார். திருஞானசம்பந்தர் திருக்குடவாயில் தேவாரத்தில் 'வரையார் திரள்தோள் அரக்கன் மடிய அவ் வரையார ஓர்கால் விரல் வைத்தபிரான்' என்பார். நீங்கள் முருக பக்தரா? வாருங்கள் மற்றொரு சைவ சமய குருநாதரான அருணகிரிப் பெருமான் 'எட்டுக்குடி' திருப்புகழில் என்ன கூறுகின்றார் என்பதையும் காண்போம், - தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற தலைபத்துடைய துட்டன் உயிர்போகச் சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே!!!! - (சுருக்கமான பொருள்): மேற்குறித்துள்ள பாடலில் இராவணனை "தலைப் பத்துடைய துஷ்டன்' என்று கடுமையாக நிந்திக்கின்றார் அருணகிரியார், 'அப்படிப்பட்ட கொடிய அரக்கனான இராவணனைக் கொன்று மீண்ட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மருமகனே' என்று முருகப் பெருமானைப் போற்றுகின்றார். அநேக அகச்சான்றுகளை இப்பதிவினில் கண்டோம், இறை உணர்வுடையோர் என்று கூறிக்கொண்டும், திருநீறு பூசிக்கொண்டும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியினை இகழும் அறியாமையைக் கைவிடுவோம், அவ்விதம் செய்வது மேற்குறித்துள்ள குருநாதர்களை நிந்திக்கும் செயலாகும் (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!! சிவ சிவ!!!

அருணகிரிநாதர் அடையாளப் படுத்தும் தமிழர் தெய்வங்கள் யார்?

திருவண்ணாமலையில் அருணகிரிப் பெருமான் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிகின்றார், யோகக் கனல் மூள்கின்றது; குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து மேலெழும்பிப் பரம்பொருள் சக்கரமான சகஸ்ராரம் சென்றடைகின்றது. கோடிசூர்யப் பிரகாசனாய் தமிழ்க் கடவுளான ஆறுமுக தெய்வம் திருக்காட்சி தந்தருள்கின்றான், அருணகிரிநாதரின் நாவில் தன் திருக்கரத்திலிருக்கும் சிவஞான வேலினால் 'ஓம்' என்று எழுதுகின்றான், 'முத்து முத்தாய்ப் பாடு' என்று அடியெடுத்துக் கொடுக்கின்றான்.
பேரின்பப் பெருநிலையில் அருணகிரியார் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' எனும் திருப்புகழினைப் பாடத் துவங்குகின்றார். முருகக் கடவுளைப் போற்றும் முதல் திருப்பாடலிலேயே 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், மாபாரதக் கண்ணனையும்' சேர்த்தே போற்றியுள்ளார், இதன் மூலம் இவ்விரு மூர்த்திகளும் தமிழர் மரபில் பன்னெடுங்காலமாய்ப் பின்னிப் பிணைந்துள்ள தன்மை புலனாகின்றது. ஸ்ரீராமர் இராவணனை சம்ஹாரம் புரிந்த நிகழ்வினை "பத்துத்தலை தத்தக் கணைதொடு" எனும் வரியினாலும், ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனின் தேர்ச்சாரதியாக இருந்து, அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொல்வதற்கு உதவும் பொருட்டு, தன் சக்கரத்தினால் சூரியனைச் சில நிமிடங்கள் மறையுமாறு செய்தருளிய நிகழ்வினைப் பின்வருமாறும் குறிக்கின்றார்,
-
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
-
பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
'தமிழர் மரபில் வழிபடு தெய்வங்கள் யார்?' என்பதனை, தமிழ்க் கடவுளாலேயே நேரடியாக அருள் பெற்றுள்ள தவப்பெரும் குன்றான அருணகிரிப் பெருமானின் மூலம் நாம் உறுதி செய்துகொள்ளப் போகின்றோமா? அல்லது இறை வெறுப்பினை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் இறை மறுப்புக் கழகங்கள் மூலமாகவா? முடிவு நம் கையில் (சிவ சிவ)!!!!

இராமாயணம் பற்றிய வள்ளலாரின் பார்வை (திருஅருட்பா அகச்சான்றுகள்):

வள்ளல் பெருமானார் திருஅருட்பாவில் தில்லையுறைப் பரம்பொருளான ஸ்ரீநடராஜ மூர்த்தியையே அருட்பெருஞ்சோதியெனப் போற்றி எண்ணிறந்த திருப்பாடல்களை அருளியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றிருக்கும் அருட்பாவில், 5ஆம் திருமுறையில் ஸ்ரீராமச்சந்திரப் பிரபுவிற்கென அதி அற்புதமான இரு பாடல் தொகுப்புகளையும் அருளியுள்ளார் என்பது ஒரு அழகிய ஆச்சரியமான குறிப்பு. அமிழ்தினும் இனிய அத்திருப்பாடல்களுள் சிலவற்றை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்.

இராமநாம சங்கீர்த்தனம்' எனும் பாடல் தொகுப்பு ஒரு திருப்பாடலோடும், 'இராமநாமப் பதிகம்' எனும் தொகுப்பு 10 திருப்பாடல்களோடும் அமையப் பெற்றுள்ளது.

இராமநாம சங்கீர்த்தனம்:
காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ரதரநீள்
சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோதராய நமஓம்
நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே!!!

கீழ்க்குறித்துள்ள திருப்பாடலில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இராமேஸ்வரப் பகுதியிலிருந்து நெடுங்கடலில் இலங்கை வரையிலும் மலைக்கற்களால் அணைகட்டிய நிகழ்வினையும், மறம்பழுக்கும் (கொடிய பாவங்களையே செய்து வந்த) இராவணனின் பத்து தலைகளையும் வெட்டி வீழ்த்திய வீரச்செயலையும் போற்றி அந்நிகழ்வுகளுக்குச் சான்றுரைக்கின்றார்.
-
இராமநாமப் பதிகம் - 7ஆம் திருப்பாடல்:
அறம்பழுக்கும் தருவே,என் குருவே, என்றன்
ஆருயிருக்கொரு துணையே, அரசே, பூவை
நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே,
நெடுங்கடலுக்கு அணையளித்த நிலையே, வெய்ய
மறம்பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டோர்
வாளினால் பணிகொண்ட மணியே, வாய்மைத்
திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே, நின்
திருவருளே அன்றிமற்றோர் செயலிலேனே.
-
இராமநாமப் பதிகம் - 2ஆம் திருப்பாடல்:
கலைக்கடலே, கருணைநெடும் கடலே, கானம்
கடந்ததடம் கடலே, என் கருத்தே, ஞான
மலைக்கண் எழும் சுடரே,வான் சுடரே, அன்பர்
மனத்தொளிரும் சுயஞ்சுடரே, மணியே, வானோர்
தலைக்கண்உறு மகுட சிகாமணியே, வாய்மைத்
தசரதன்தன் குலமணியே, தமியேன் உள்ள
நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ளலே, என்
நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்திலாயே

8 1/2 லட்சம் ஆண்டுகள் பழமையான வால்மீகி இராமாயணம்:

நிகழ்வுகள் நடந்தேறும் கால கட்டத்திலேயே தொகுக்கப்பட்டுக் காவியமாக எழுதப் பெறுபவையே 'இதிகாசங்கள்' என்று குறிக்கப் பெறும். அவ்வகையில் வால்மீகி முனிவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இப்புவியில் அவதரித்திருந்த திரேதா யுக காலக் கட்டத்திலேயே தோன்றியவர், இராம காவியத்தில் இம்முனிவரும் ஒரு கதாபாத்திரமாகவே இருந்து வந்துள்ளார் என்பது தெளிவு. வால்மீகி மாமுனி ஆதி இராமாயணத்தினை இயற்றியருளியது சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் என்பதனை இச்சமயத்தில் நினைவு கூர்வோம் (தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்திற்கும் 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகத்தின் காலகட்டம் மட்டுமே 8,64,000 ஆண்டுகள்).

தெய்வத் தமிழ் மொழியும் தசரத மைந்தனும் (வியப்பூட்டும் கம்ப இராமாயணக் குறிப்புகள்):

கைகேயி அன்னையின் வாக்கினைத் தசரதனின் ஆணையென ஏற்கும் கோசலை மைந்தன் 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்று அக்கணமே கானகம் செல்ல முனைகின்றான். எனினும் இலக்குவனோ தமையனுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி கண்டு வெகுண்டு யாவரையும் அழித்தொழிக்கும் எண்ணத்துடன் வில்லினில் நாணொலி எழுப்புகின்றான், அண்டங்கள் யாவும் நடுநடுங்குகின்றன. அச்சமயத்தில் இராகவன் பல்வேறு அறவுரைகளால் இலக்குவனை அமைதியுறச் செய்வதாகக் கம்ப இராமயணம் பதிவு செய்கின்றது, இனி இது குறித்த திருப்பாடலொன்றினை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(அயோத்தியா காண்டம் - நகர் நீங்கு படலம்):
நன்சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -
தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான்!!!

(சுருக்கமான பொருள்):
இலட்சுமணா, இனிய சொற்களை மட்டுமே சொல்லி இதுநாள் வரையிலும் நமை வளர்த்த தந்தையின் வாக்கினை மீறி அரசாள முனைவது எந்தவொரு கோணத்திலும் அறமாகாது! எம்மை 'தாய், தந்தை, தலைவன், இறைவன்' என்று அனைத்துமாகவும் ஏற்றுள்ளதாகப் பலமுறை கூறுவாயே, அவையாவும் உண்மையெனில் இப்பொழுது எம்முடைய சொற்களை மீறி நீ அடைந்து விடக்கூடிய பயன் தான் என்ன? என்று அறவுரை பகர்கின்றான் இராமன்.

திருப்பாடலின் இறுதி வரியில் 'வடமொழி; தென்மொழியாகிய தமிழ்' ஆகிய இரண்டிலும் பெரும் புலமை பெற்றிருந்தான் ஸ்ரீராமன் என்று குறிக்க வரும் கம்பர், வடமொழியில் கூட எல்லை வரையில் மட்டுமே புலமை பெற்றிருந்தான் என்று கூறிப் பின் தென்மொழியாகிய தெய்வத் தமிழ் மொழியில் 'எல்லையையும் கடந்த புலமை பெற்றிருந்தான்' என்பதனைத் 'தென்சொல் கடந்தான்' எனும் சொற்களால் பதிவு செய்கின்றார்.

சாதிப் பாகுபாடுகளற்ற சமுதாயத்தை முன்மொழியும் இராம காவியம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, வேடர் இனத்தவரான குகனையும் சகோதரனாக ஏற்றார், வானர இனத்தவரான சுக்ரீவனையும் தம்பியாக ஆட்கொண்டார், அது மட்டுமா! உயிர்க்குயிரான மிதிலைச் செல்வியைப் பேடித்தனமான முறையில் கடத்திச் சென்ற கயவனான இராவணனின் தம்பி விபீஷணன் அடைக்கலம் நாடி வருகையில், அசுர குலத்தவனான அவனையும் அரவணைத்து உடன் பிறந்தோனாக ஏற்று அருள் புரிந்தார். இனி இது தொடர்பான கம்பராமாயணத் திருப்பாடல் ஒன்றினையும் சிந்தித்து மகிழ்வோம்,

யுத்தகாண்டம்: வீடணன் அடைக்கலப் படலம்:
குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்;
புகலருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை
-
சுருக்கமான பொருள்:
முதலில் நான்கு சோதரர்களாக இருந்தோம், பின் கங்கைக் கரையில் வாழும் குகனுடன் ஐவரானோம்; பின்னர் குன்றுகளின் தலைவனான சுக்ரீவனுடன் சேர்ந்து அறுவரானோம்; அகத்தில் மிக்க அன்புடன் இன்றெமை நாடி இவ்விடம் வந்துள்ள விபீஷணா, இப்பொழுது உன்னுடன் சேர்த்து எழுவரானோம். எமக்கு கானகம் தந்த காரணத்தாலன்றோ உனது தந்தை தசரதன் இன்று மேலும் மூன்று திருக்குமாரர்கள் வாய்க்கப் பெற்றுச் சிறப்புற்றார் (குறிப்பு: எமது தந்தை என்று கூறாது உனது தந்தை (நுந்தை) என்று கூறும் சொல்லாட்சி உள்ளத்தினை நெகிழ்விப்பது).

இராமன் என்பது நேர்மையைக் குறிப்பது, இராமன் என்பது ஒருசிறிதும் மாறுபடாத ஒழுக்கத்தைக் குறிப்பது, இராமன் என்பது சாதி; இன பாகுபாடுகளற்ற நற்சமூகத்தினைக் குறிப்பது; இராமன் என்பது குற்றமில்லா  வீரத்தைக் குறிப்பது! ஸ்ரீராமஜயம்!

கவியரசர் கண்ணதாசனும் ஈ.வே.ராவும் (நாத்தீகர் கம்ப இராமாயணத்தினால் பரம ஆத்தீகராக பரிணமித்த சுவையான நிகழ்வு):

கண்ணதாசன் இளம் பிராயத்தில் ஈ.வே.ரா வின் கோட்பாடுகளால் (???) பெரிதும் ஈர்க்கப்பட்டு அவருடைய இறை மறுப்புக் கழகத்தில் இணைகின்றார். ஈ.வே.ரா வின் இயக்கம் அச்சமயத்தில் 'இந்து மதத்தினை எதிர்க்கும்' பிரதான நோக்குடன் 'கம்ப இராமாயணம் தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது' எனும் போலிப் பிரச்சாரத்தினைக் கையிலெடுக்கின்றது. அக்காவியத்தில் கையாளப்படும் 'அசுரர்கள்' எனும் பதம் 'தமிழர்களையே குறிக்கின்றது' என்றும், 'தமிழினத்தைக் கம்ப காவியம் குரங்குகளாகச் சித்தரிக்கின்றது' என்றும் வரைமுறையற்ற புதுப்புதுக் கதைகளைப் புனைந்துப் பிதற்றித் திரிந்து வருகின்றனர்.

கம்ப இராமாயண நூல்களையும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவுருவப் படங்களையும் எரிக்கும் போராட்டங்களைப் பல்வேறு இடங்களில் துவங்குகின்றனர். அறிஞர்(???) அண்ணாவும் 'கம்ப ராமாயணம் ஒரு காம நூல்' எனும் நூலொன்றினை எழுதித் தன் பங்குக்குப் பகுத்தறிவுத் திருப்பணி (???) புரிகின்றார். இக்கட்டான இக்கால கட்டத்தில் கம்ப இராமாயணத்தைத் தானும் விமர்சித்து எழுத வேண்டும் எனும் நோக்கோடு அதனைப் படிக்கத் துவங்குகின்றார் முத்தையா (கண்ணதாசன்).

தொடர்ந்து பல மாதங்கள் கவிச்சக்கரவர்த்தியின் இலக்கியப் புனலில் மூழ்கியெழுகின்றார். அத்திருப்பாடல்களின் மேன்மையினை உணர்ந்து வியக்கின்றார். 'இரக்கம் என்றவொன்று இல்லாதிருப்பவரே அரக்கர்' என்று கம்பர் குறித்துள்ளமையைக் கற்றுத் தெளிகின்றார். உன்னதமான வாழ்வியல் கோட்பாடுகளும், மனித வாழ்வை மேம்படுத்தும் ஒப்புவமையற்ற தர்மங்களும் கம்ப இராமாயணம் முழுவதும் பரவியிருத்தலைக் காண்கின்றார்.

இதன் பின்னர், கொள்கைகள் ஏதுமற்று, புரிதலற்ற வெறுப்பு; பகைமை; காழ்ப்புணர்ச்சி இவைகளை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் ஈ.வே.ரா வின் நாத்தீகக் கழகத்திலிருந்து முழுவதும் விலகி வந்து, இந்து சமயத்தைப் பின்பற்றத் துவங்குகின்றார் நம் கவியரசர். ஆர்வம் மீதுறப் பற்பல இந்து தர்ம சாத்திரங்கள்; உபநிடதங்கள்; கீதை; சைவ; வைணவ அருளாளர்களின் திருப்பாடல்கள் இவைகளை எண்ணிறந்த ஆண்டுகள் பெரிதும் முனைந்துக் கசடறக் கற்றறிகின்றார்.

இந்து தர்மம் முன்னிறுத்தும் வழிபாட்டு முறைகள்; சடங்குகள்; மரபுகள் இவை ஒவ்வொன்றையும் பல்வேறு கோணங்களில் ஆய்ந்தறிந்து 'அர்த்தமுள்ள இந்து மதம்' எனும் அற்புத நூலை இயற்றுகின்றார். 10 பகுதிகளைக் கொண்ட இந்நூல் பதிப்பித்து வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே பல லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த பெருமையினைக் கொண்டது. திருவருளால் திரு.கண்ணதாசன் அவர்களுக்கு கைகூடிய கிடைத்தற்கரிய அனுபவ ஞானத்தினை இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர இயலும்.

முட்டாள் இராவணன் (பழனித் திருப்புகழில் இராவணனை கடுமையாய் நிந்திக்கும் அருணகிரிநாதர்):

முருகப் பெருமானை பலமுறை நேரிலேயே தரிசித்துப் போற்றியுள்ள அருணகிரிநாதர் 'இத்தாரணிக்குள்' என்று துவங்கும் திருப்புகழின் இறுதி வரிகளில் இராவணனை மிகக் கடுமையாய்ச் சாடிப் பின் திருமாலின் அவதாரமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் போற்றுகின்றார்,
-
மத்தா மதக்களிறு பின்தானுதித்த குகன்
ஏதத்திலங்கையினில் ஆதிக்கம்உண்டதொரு
முட்டாள்அரக்கர்தலை இற்றே விழக்கணைக
ளேதொட்ட கொண்டலுருவாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமலம் உற்றா சனத்திருவை
மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய ...... மருமகனாகி
-
(சுருக்கமான பொருள்):
யானையின் திருமுகம் கொண்ட ஸ்ரீவிநாயக மூர்த்தியின் பின்னர் தோன்றிய ஆறுமுகக் கடவுளே, குற்றம் நிறைந்த இலங்கையை ஆண்டு வந்த, அறிவு ஒருசிறிதுமில்லாத முட்டாள் அரக்கனான இராவணனின் தலைகள் பத்தும் நிலத்தில் இற்று விழுமாறு கணைகளை ஏவிய, மேகத்தின் நிறம் கொண்டவரும், சனகன் மகளாகிய அன்னை சீதையை மணம் புரிந்தவருமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அன்புக்கு உரிய மருமகனே!!!

பெரும்பாட்டன் லாஜிக்கில் மாற்றம் செய்வோம் (அலைகடலென அணி திரண்டு வாரீர் 😏🔥):

முறையற்ற காமத்தினால் பிறர் மனைவியைக் கடத்திச் சென்ற கொடியவனான இராவணனைப் பெரும்பாட்டன் என்று கூறுவதற்கு பதிலாக அச்செயல் தவறென்று பல்வேறு வகைகளில் அறிவுறுத்த முயன்று இராவணனால் அவமானப் படுத்தப்பட்ட அவனுடைய சகோதரன் விபீஷணனையோ அல்லது அண்ணனுக்கு 'அன்னை சீதையைக் கவர்ந்தது முறையற்றது, பேசுவது மானம் இடைபேணுவது காமம்' என்று அறிவுறுத்திய மற்றொரு சகோதரனான கும்பகர்ணனையோ பெரும் பாட்டனாக ஏற்கலாமே! பிறர் மனைவியைக் கவர்ந்தவனை ரோல் மாடலாகக் கொள்வதை விட இது கௌரவமான செயலல்லவா ? எப்படி பார்த்தாலும் இம்மூவரும் ஒரே குடும்பம் தானே? தமிழன்டா!!!!

ஸ்ரீராமர் ஏன் இலங்கைக்குப் பறந்து செல்லவில்லை? (காஞ்சி மகாப் பெரியவரின் அற்புத விளக்கங்கள்):

ஸ்ரீராமர் ஏன் இலங்கைக்குப் பறந்து செல்லவில்லை? இராவணன் கடத்திச் செல்லும் பொழுது சீதையின் கூக்குரல் ஏன் இராமனுக்கு கேட்கவில்லை, எனில் அவர் எப்படி கடவுளாக இருந்திருக்க முடியும்? (காஞ்சி மகாப் பெரியவரின் அற்புத விளக்கங்கள்):

"இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம், அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?" என்று கேலி செய்து கேட்டவர்கள், எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள், ராமனாக இந்த உலகத்தில் வாழ்ந்த போது மனுஷ்ய வேடத்தில் இருந்தான்; மநுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்துப் பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது, இராமாயண நாடகம் தான். அதில் லவ; குசர்களை வால்மீகி இராமனிடம் அழைத்து வருகிறார், ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்கார் இராமனாக வேடம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்த பிள்ளைகளே நாடகத்தில் லவ; குசர்களாக நடிக்கிறார்கள். நாடக இராமன் வால்மீகியைப் பார்த்து 'இந்த குழந்தைகள் யார்' என்று கேட்கிறார். ராமசுவாமி அய்யங்காருக்குத் தன்னுடைய சொந்த பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி 'இவர்கள் ராஜபார்ட் ராமசுவாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள் தானே அந்த ராமசுவாமி அய்யங்கார்! என்று பதில் சொன்னால் எத்தனை ரசாபாசமாக இருக்கும்? வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத் தான் நடிக்க வேண்டும்.

ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார். வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேடம் போட்டுக் கொண்டவுடன், வேதங்களும் வால்மீகியின் குழந்தையாக, இராமாயணமாக வந்துவிட்டது. அந்த இராமாயணம் முழுக்க எங்கு பார்த்தாலும் தர்மத்தைத் தான் சொல்லி இருக்கிறது.
*
(ஆதார நூல்: தெய்வத்தின் குரல், பாகம் 1, பகுதி 'ஸ்ரீராமன்', பக்கங்கள் 596, 597):

இராவணன் சீதா தேவியைக் கடத்திச் சென்றது பழிவாங்கும் பொருட்டா அல்லது முறையற்ற காம எண்ணத்திலா? (ஆதாரபூர்வ விளக்கங்கள):

'தங்கையான சூர்ப்பனகை மூக்கறுபட்டதால் அதற்குப் பழிவாங்கும் பொருட்டே தேவி சீதையை இராவணன் கடத்திச் சென்றானே அன்றி காம எண்ணத்தினால் அல்ல' என்று நாத்தீகக் கழகங்களும், இந்து மத விரோதப் போக்கினைக் கொண்ட கட்சிகளும் பெருமுனைப்புடன் மக்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர். இனிக் கம்ப இராமாயணத்தின் 'ஆரண்ய காண்டம் - சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்' வாயிலாக உண்மையினை உணர்ந்துத் தெளிவுறுவோம் (மொத்தம் 170 பாடல்களைக் கொண்டது இப்படலம்).

சூர்ப்பனகை முன்னமே திருமணம் ஆனவள், எனினும் இராம; இலட்சுமணர்களின் மீது காம வயப்பட்டுப் பலவந்தமாக நெருங்க முயல்கின்றாள், அது நிறைவேறாது போகவே கடும் கோபமுற்று அன்னை சீதையைக் கொல்ல முயல்கின்றாள், அதனால் இலக்குவனால் மூக்கறு படுகின்றாள். நடந்தது இவ்வாறிருக்க இராவணனிடத்திலோ 'அண்ணா! விண்ணவரும் வியக்கும் சீதையெனும் பேரழகியைக் கண்டு அவளை உனக்குப் பரிசளிக்கும் பொருட்டு இழுத்து வர முனைந்தேன், அங்கிருந்த இராம; இலட்சுமணர்களோ என் மூக்கை அறுத்ததோடு உன்னையும் ஆண்மையற்றவன்; பேடி என்று பலவாறாகப் தூற்றினர்' என்று முழுவதுமாய் மாற்றிக் கூறுகின்றாள்.
மெதுமெதுவே அன்னை சீதையின் அழகினைப் பற்றிப் பலப்பல கூறி இராவணனின் மனதினில் காம நெருப்பினைப் பற்றச் செய்கின்றாள், இனி 'சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறும் பகுதிகளின் தலைப்பினைக் கண்டுத் தெளிவுறுவோம்'.

1. சூர்ப்பனகை வந்த போது இராவணன் இருந்த நிலை
2. சூர்ப்பனகையைக் கண்ட இலங்கை மாந்தரின் துயரம்
3. அண்ணன் இராவணன் அடிகளில் அரக்கி வீழ்தல்
4. யார் செய்தது இது என இராவணன் வினவல்
5. இராவணன் நடந்தது கூற வேண்டுதல்
6. சூர்ப்பனகை இராம இலக்குவர் குறித்துக் கூறுதல்
7. இராவணன் தன்னையே பழித்து மொழிதல்
8. என்ன செய்தான் கரன் என இராவணன் வினவுதல்
9.சூர்ப்பனகை நடந்தது நவிலல்
10. நீ செய்த பிழை யாது என இராவணன் வினவல்
11. சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்
12. இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்
13.இராவணனின் முற்றிய காம நோய்
14. இராவணன் ஒரு குளிர் சோலை அடைதல்
15. இராவணன் சந்திரனைக் கொணரும்படி கூறல்
16. இராவணன் நிலவைப் பழித்தல்
17. இராவணனின் ஆணைப்படி பகலும் பகலவனும் வருதல்
18. இராவணன் கதிரவனைப் போகச்சொல்லி கவின் பிறையைக் கொணரச் சொல்லுதல்
19. பிறையைக் குறை கூறல்
20.இராவணன் இருளினை ஏசுதல்
21. சீதையின் உருவெளிப்பாடு காண்டல்
22. இராவணன்-சூர்ப்பனகை உரையாடல்
23. சந்திரகாந்த மண்டபம் சமைவித்து இராவணன் அதனுள் சார்தல்
24. இராவணன் தென்றலைச் சீறுதல்
25. இராவணன் மாரீசனை அடைதல்

மேற்குறித்துள்ள பகுதிகளுள், 11,12,13 பகுதிகளான 'சீதையின் அழகை சூர்ப்பனகை விரித்துரைத்தல்', 'இராவணனுக்கு மோகவெறி தலைக்கு ஏறல்', 'இராவணனின் முற்றிய காம நோய்' ஆகியவை 'இராவணன் சீதா தேவியைக் கவர்ந்து சென்றது முறையற்ற காம எண்ணத்தின் பொருட்டே' என்று மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.

அனைவரும் அவசியம் முறையான கம்ப இராமாயண உரை நூலினை வாங்கி ஆரண்ய காண்டத்தின் 'சூர்ப்பனகைப் படலம், சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம்' ஆகியவற்றை முழுவதுமாய்ப் படித்துத் தெளிவுறுவோம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராமாயணத்தில் ஆரிய சூழ்ச்சியா? (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

நான்முகக் கடவுளான பிரமனின் 10 புதல்வர்களுள் ஒருவர் புலஸ்திய மகரிஷி, அந்தணர் மரபினரான இவரின் புதல்வர் விஸ்ரவ முனிவர், விஸ்ரவரின் முதல் மனைவியான கைகேசிக்கு பிறந்தவர்கள் நால்வர், இராவணன்; கும்பகர்ணன்; விபீஷணன் மற்றும் சூர்ப்பனகை. ஆக இராவணன் அந்தண மரபு என்பது தெளிவு, சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் காமம் கொண்டு நெருங்குகையில் தசரத மைந்தன் பலப்பல அறங்களைக் கூறியும் அவள் எண்ணம் மாறாததால் இறுதியாய் 'பெண்ணே! நம் இருவரின் மரபும் வெவ்வேறு, நீயோ அந்தண மரபு, நானோ சத்ரிய வம்சமான அரச குலம் ஆதலின் இது பொருந்தாது' என்று கூறுகின்றார்.

கவிச்சக்கரவர்த்தி இதனை 'அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' எனும் இறுதி வரியில் பதிவு செய்கின்றார்.

(கம்ப இராமாயணம்: ஆரண்ய காண்டம்: சூர்ப்பணகைப் படலம், திருப்பாடல் 49)
'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;
'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;
அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான்.

வால்மீகி; கம்பர் இருவருமே மிகத் தெளிவாக இராவணன் அந்தண மரபினன் என்றுச் சுட்டியுள்ளனர், மேலும் வால்மீகி வேடர் குலத்தினர், கம்பரோ பாணர் மரபினர், ஆக இராமாயணத்தை எழுதியவரும் பிராமணர் அல்லர் அதில் எழுதப் பெற்றுள்ள நாயகனான ஸ்ரீராமரும் பிராமணர் அல்லர்; சத்ரிய வம்சத்தினர் எனில் ஆரிய சூழ்ச்சி இதில் எங்கு தான் வருகின்றது? என்பதே நகைப்புக்குரிய கேள்வி.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.