இராவணனுக்கு கும்பகர்ணன் கூறிய அறிவுரை (பேசுவது மானம் இடைபேணுவது காமம்):

கும்பகர்ணன் தமையனான இராவணனுக்கு நன்னெறியினை பலவாறு எடுத்துரைக்கின்றான், அன்னை சீதையை நயவஞ்சகமாக அபகரித்து வந்தது மறை நெறிகளுக்குப் புறம்பானது என்று இடித்துரைக்கின்றான். "சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்" என்று இகழ்கின்றான். அனைத்துவித மரியாதைகளோடு அன்னை ஜானகியை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் சேர்ப்பித்து மன்னிப்பு வேண்டுவதொன்றே உய்யும் வழி என்று பகர்கின்றான். எனினும் அகந்தையின் உச்சத்திலிருந்த இராவணனோ இவையெதற்குமே செவிசாய்க்கவில்லை. இனி இக்காட்சி தொடர்பான கம்ப இராமாயணப் பாடலொன்றினையும் காண்போம்,
யுத்த காண்டம் - இராவணன் மந்திரப் படலம்:
ஆசில் பரதாரம் அவை அஞ்சிறை அடைப்போம்
மாசில் புகழ் காதல் உறுவோம்; வளமை கூறப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று நம் கொற்றம்!!!

பொருள்:
தமையனே, ஒருபுறம் 'குற்றம் ஒரு சிறிதுமில்லாப் பிறிதொருவரின் தாரத்தின் மேல்' முறையற்ற மோகம் கொண்டு அம்மாதினைக் கடத்தி வந்து சிறை வைக்கின்றோம்! மற்றொரு புறமோ 'குற்றமில்லாத புகழ்' வந்தெய்த வேண்டும் என்றும் விரும்புகின்றோம். இது விந்தையன்றோ! நம் வார்த்தைகளில் தெரிவதோ வீரமும் மானமும், ஆனால் நம் செயல்களிலோ முறையற்ற காமமும் ஈனத்தன்மையுமே வெளிப்படுகின்றது. இவ்விதமான பழிச் செயல்களால் 'மானிடர்களுக்கு அஞ்சி வாழும் சிறுமை நிலையும்' நமக்கின்று எய்தியுள்ளது, நன்றாக இருக்கின்றது நமது அரசாட்சியும் கொற்றமும்!

No comments:

Post a Comment