5100 வருடங்கள் பழமையான தமிழ்ப் பாசுரங்களில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி:

துவாபர யுகம் முடிவுற்றுக் கலியுகம் துவங்கி தற்பொழுது சுமார் 5100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. கலி துவங்கி சரியாக 60 நாட்களுக்குள் அவதரித்த அருளாளர் 'சடகோபர்' எனும் நம்மாழ்வார். அவதாரத் தலம் 'தூத்துக்குடி மாவட்டத்திலிலுள்ள ஆழ்வார் திருநகரி எனும் திருக்குருகூர்'. பன்னிரு ஆழவார்களுள் முதன்மையானவராகப் போற்றப் பெறுபவர். ஒப்புவமையற்ற நமது இந்து தர்மத்தின் 'ரிக்; யஜுர்; சாம; அதர்வண' வேதங்களின் சாரங்களைத் தமிழ்ப் பாக்களாக்கித் தருவதே இப்புண்ணிய சீலரின் அவதார நோக்கம். 'வேதம் தமிழ்செய்ய வந்த மாறன்' என்றிவரைக் கொண்டாடுவர். இப்பெருமகனார் 'திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி' ஆகிய நான்கு அற்புதப் பிரபந்தத் தொகுப்புகளை அருளியுள்ளார்.

இனி நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றினைக் காண்போம், 'கற்க வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவ்யமான சரிதங்களையே அன்றி வேறெதுவுமில்லை' என்று பின்வரும் திருப்பாடலில் போற்றுகின்றார்.

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!!!

No comments:

Post a Comment