ஈனமிலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் (திருஞானசம்பந்தர் சான்றுரைக்கும் இராமயண நிகழ்வுகள்):

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 3):
மானன நோக்கியை தேவிதன்னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக்கன் உயிர் செற்றவன்
ஈனமிலாப் புகழண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன்பொருளாகி நின்றதொரு நன்மையே.
-
(பொருள்):
அன்னை சீதா தேவியை மாயையால் கானகத்திலிருந்து முறைகேடாகக் கவர்ந்து சென்ற அரக்கனான இராவணனின் உயிரைப் போக்கிய, குற்றம் சிறிதுமில்லாப் புகழினைக் கொண்ட அண்ணலான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி செய்வித்த திருஇராமேச்சுர லிங்க மூர்த்தியைப் போற்றுபவர்க்கு சிவஞானமும் அதன் பயனான முத்தியின்பமும் கிட்டும்.

(திருஇராமேச்சுரம் தேவாரம்: திருப்பாடல் 4):
உரையுணராதவன் காமமென்னும் உறுவேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில்லி மகிழ்ந்தேத்திய
விரைமருவும் கடலோத மல்கு இராமேச்சுரத்து
அரைஅரவாட நின்றாடல் பேணும் அமம்மான்நல்லனே!!!
-
(சுருக்கமான பொருள்):
'காமமென்னும் உருவேட்கையான்' எனும் முதல் வரிமூலம் 'இராவணன் அன்னை சீதையை கடத்திச் சென்றது 'முறையற்ற காமத்தின் பொருட்டே' என்று சம்பந்தப் பெருமான் ஐயத்திற்கு இடமின்றிச் சான்றுரைக்கின்றார். 2ஆம் வரியில் 'இராவணனுடைய மலை போன்ற தோள்களைத் தன்னுடைய வில்லினால் அற்று விழுமாறு அழித்தொழித்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மகிழ்ந்தேத்திய இராமேச்சுரம்' என்று போற்றுகின்றார்.

No comments:

Post a Comment