அருணகிரிநாதர் அடையாளப் படுத்தும் தமிழர் தெய்வங்கள் யார்?

திருவண்ணாமலையில் அருணகிரிப் பெருமான் பனிரெண்டு ஆண்டுகள் கடும் தவம் புரிகின்றார், யோகக் கனல் மூள்கின்றது; குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து மேலெழும்பிப் பரம்பொருள் சக்கரமான சகஸ்ராரம் சென்றடைகின்றது. கோடிசூர்யப் பிரகாசனாய் தமிழ்க் கடவுளான ஆறுமுக தெய்வம் திருக்காட்சி தந்தருள்கின்றான், அருணகிரிநாதரின் நாவில் தன் திருக்கரத்திலிருக்கும் சிவஞான வேலினால் 'ஓம்' என்று எழுதுகின்றான், 'முத்து முத்தாய்ப் பாடு' என்று அடியெடுத்துக் கொடுக்கின்றான்.
பேரின்பப் பெருநிலையில் அருணகிரியார் 'முத்தைத்தரு பத்தித் திருநகை' எனும் திருப்புகழினைப் பாடத் துவங்குகின்றார். முருகக் கடவுளைப் போற்றும் முதல் திருப்பாடலிலேயே 'ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், மாபாரதக் கண்ணனையும்' சேர்த்தே போற்றியுள்ளார், இதன் மூலம் இவ்விரு மூர்த்திகளும் தமிழர் மரபில் பன்னெடுங்காலமாய்ப் பின்னிப் பிணைந்துள்ள தன்மை புலனாகின்றது. ஸ்ரீராமர் இராவணனை சம்ஹாரம் புரிந்த நிகழ்வினை "பத்துத்தலை தத்தக் கணைதொடு" எனும் வரியினாலும், ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனின் தேர்ச்சாரதியாக இருந்து, அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொல்வதற்கு உதவும் பொருட்டு, தன் சக்கரத்தினால் சூரியனைச் சில நிமிடங்கள் மறையுமாறு செய்தருளிய நிகழ்வினைப் பின்வருமாறும் குறிக்கின்றார்,
-
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
-
பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
'தமிழர் மரபில் வழிபடு தெய்வங்கள் யார்?' என்பதனை, தமிழ்க் கடவுளாலேயே நேரடியாக அருள் பெற்றுள்ள தவப்பெரும் குன்றான அருணகிரிப் பெருமானின் மூலம் நாம் உறுதி செய்துகொள்ளப் போகின்றோமா? அல்லது இறை வெறுப்பினை உமிழ்ந்துக் கொண்டிருக்கும் இறை மறுப்புக் கழகங்கள் மூலமாகவா? முடிவு நம் கையில் (சிவ சிவ)!!!!

No comments:

Post a Comment