சாதிப் பாகுபாடுகளற்ற சமுதாயத்தை முன்மொழியும் இராம காவியம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, வேடர் இனத்தவரான குகனையும் சகோதரனாக ஏற்றார், வானர இனத்தவரான சுக்ரீவனையும் தம்பியாக ஆட்கொண்டார், அது மட்டுமா! உயிர்க்குயிரான மிதிலைச் செல்வியைப் பேடித்தனமான முறையில் கடத்திச் சென்ற கயவனான இராவணனின் தம்பி விபீஷணன் அடைக்கலம் நாடி வருகையில், அசுர குலத்தவனான அவனையும் அரவணைத்து உடன் பிறந்தோனாக ஏற்று அருள் புரிந்தார். இனி இது தொடர்பான கம்பராமாயணத் திருப்பாடல் ஒன்றினையும் சிந்தித்து மகிழ்வோம்,

யுத்தகாண்டம்: வீடணன் அடைக்கலப் படலம்:
குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்;
புகலருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை
-
சுருக்கமான பொருள்:
முதலில் நான்கு சோதரர்களாக இருந்தோம், பின் கங்கைக் கரையில் வாழும் குகனுடன் ஐவரானோம்; பின்னர் குன்றுகளின் தலைவனான சுக்ரீவனுடன் சேர்ந்து அறுவரானோம்; அகத்தில் மிக்க அன்புடன் இன்றெமை நாடி இவ்விடம் வந்துள்ள விபீஷணா, இப்பொழுது உன்னுடன் சேர்த்து எழுவரானோம். எமக்கு கானகம் தந்த காரணத்தாலன்றோ உனது தந்தை தசரதன் இன்று மேலும் மூன்று திருக்குமாரர்கள் வாய்க்கப் பெற்றுச் சிறப்புற்றார் (குறிப்பு: எமது தந்தை என்று கூறாது உனது தந்தை (நுந்தை) என்று கூறும் சொல்லாட்சி உள்ளத்தினை நெகிழ்விப்பது).

இராமன் என்பது நேர்மையைக் குறிப்பது, இராமன் என்பது ஒருசிறிதும் மாறுபடாத ஒழுக்கத்தைக் குறிப்பது, இராமன் என்பது சாதி; இன பாகுபாடுகளற்ற நற்சமூகத்தினைக் குறிப்பது; இராமன் என்பது குற்றமில்லா  வீரத்தைக் குறிப்பது! ஸ்ரீராமஜயம்!

No comments:

Post a Comment