சிவபெருமானுக்கும் முருகக் கடவுளுக்கும் முப்புரி நூலான பூணூலா? (முறையான விளக்கங்கள்):

இறைவனின் திருமார்பில் விளங்கும் முப்புரி நூலை 'நான்மறைகளுக்கான குறியீடு அல்லது வைதீக தர்மத்தின் குறியீடு' என்ற அளவில் பொருள் கொள்ளுதலே சிறப்பு அன்றி அது ஒரு குலத்தையோ சமூகத்தையோ குறிக்க வந்ததன்று. 'நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்' என்று 'முப்புரி நூல் வேதாந்தத்தையே குறிக்க வந்தது' என்பதனைத் திருமூலர் தெளிவுறுத்துகின்றார். 
*
இனி முருகப் பெருமான் முப்புரி நூல் அணிந்தருள்வதை அருணகிரிப் பெருமானின் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 
-
('மின்னார் பயந்த' என்று துவங்கும் முள்வாய் தலத் திருப்புகழ்): 
'பொன்னார் சதங்கை தண்டை முந்நூல் கடம்பணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அதுபோல'
-
பொன் சதங்கை; தண்டை இவைகளைக் திருக்கழலிலும், முப்புரி நூல்; கடப்ப மாலை இவைகளைத் திருத்தோள்களிலும் முருகப் பெருமான் அணிந்தருளும் திருக்காட்சியை இத்திருப்பாடலில் போற்றுகின்றார்,  
-
('உறவின்முறை கதறியழ' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்): 
'மதுவொழுகு தரவில்மணி மீதே முநூல்ஒளிர'
-
தேனொழுகும் மணிமாலையின் மேல் பூணூல் விளங்குமாறு' முருகப் பெருமான் எழுந்தருளி வரும் திருக்காட்சியை இத்திருப்பாடலில் போற்றுகின்றார், 
-
('தருவூர் இசையார்' என்று துவங்கும் வழுவூர் தலத் திருப்புகழ்):
'புரிநூலும் உலாவு துவாதச ...... புயவீரா'
-
'முப்புரி நூல் அசைகின்ற பன்னிரு திருத்தோள்களை உடையவனே' என்று இத்திருப்பாடலில் போற்றுகின்றார், 
*
பிரசித்தி பெற்ற கந்த சஷ்டிக் கவசத்தில், 'முப்புரி நூலும் முத்தணி மார்பும்' என்று பதிவு செய்துப் போற்றுகின்றார் பாலன் தேவராய சுவாமிகள்.
*
தேவாரத் திருமுறைகள் முழுவதிலும் எண்ணிறந்த திருப்பாடல்களில் சிவபெருமான் முப்புரி நூல் அணிந்தருளும் திருக்காட்சியினை தேவார மூவர் பதிவு செய்துப் போற்றியுள்ளனர், 
-
பின்வரும் திருநள்ளாறு திருப்பதிகத்தின் 5ஆம் திருப்பாடலில், ' நூல்கிடந்த மார்பில்' என்று போற்றுகின்றார் ஞானசம்பந்தப் பெருமான்,  
-
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே
*
பின்வரும் திருஆமாத்தூர் திருப்பதிகத்தின் 6ஆம் திருப்பாடலில், 'பூண்டவன் பூண்டவன் மார்பில் புரிநூல் புரளவே' என்று போற்றுகின்றார் நாவுக்கரசு சுவாமிகள்,
-
காண்டவன் காண்டவன் காண்டற்கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரிநூல் புரளவே
*
பின்வரும் திருக்கூடலையாற்றூர் திருப்பதிகத்தின் 6ஆம் திருப்பாடலில், 'வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு' என்று போற்றுகின்றார் சுந்தர மூர்த்தி நாயனார், 
-
வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொடும் உடனே
கொத்தலரும் பொழில்சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே

2 comments: