இந்து மதத்தின் தொன்மை (யுகங்கள், கால சக்கரம், 14 உலகங்கள், பிரளயம்):

இந்து தர்மம் பேசும் யுகங்கள் நான்கு, கிருத (சத்திய) யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். யுகங்களின் கால அளவுகளை இருவேறு வகையில் புராணங்கள் விவரிக்கும், தேவ வருட அளவு அல்லது பூவுலகின் வருட அளவு. தேவ வருட கணக்கின் படி 1 நாள் என்பது நம்முடைய 1 வருடத்தைக் குறிக்கும்; 1 வருடம் என்பது நம்முடைய 360 வருட கால அளவினைக் குறிக்கும். இப்பதிவினில் நம்முடைய அளவுகோலின் வழியிலேயே  யுக அளவினைச் சிந்தித்து உணர்வோம்.

கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரம் ஆண்டுகள் (4,32,000). துவாபர யுகம் இக்கால அளவின் இரண்டு பங்கு (8 64,000), திரேதா யுகம் மூன்று பங்கு (12,96,000), கிருத யுகம் நான்கு பங்கு (17,28,000). நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம், 4:3:2:1 எனும் விகிதாச்சாரத்திலுள்ள சதுர்யுக யுகங்களின் மொத்த கால அளவு நாற்பத்து மூன்று லட்சத்து இருபது ஆயிரம் ஆண்டுகள் (43,20,000).
71 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு 'மன்வந்திரம்' என்று அழைக்கப் பெறும். ஒவ்வொரு மன்வந்திரத்துக்கும் 'மனு' எனும் அதிகாரியொருவர் இருப்பார். 14 மன்வந்திரங்களின் கால அளவு ஒரு 'கல்பம்', 1000 சதுர்யுகங்களைக் கொண்ட இக்கல்பமே பிரம்மாவின் ஒரு பகல் பொழுதாகும். பிரம்மாவின் ஒரு நாள் என்பது இரு கல்ப கால அளவினைக் கொண்டது. முதல் கல்பமான பகல் பொழுதின் முடிவில் நிகழ்ந்தேறும் பிரளயத்தில்,14 உலகங்களில் மூன்று உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) மட்டும் முழுவதுமாய் அழியும்.

இப்பிரளயம் பிரமனின் இரவுப் பொழுது முழுவதும் நீடிக்கும் (ஒரு கல்ப காலம்). அதாவது அடுத்த 1000 சதுர்யுகங்களுக்குப் படைப்பேதும் நடந்தேறாது. அதுவரையில் சிவமுத்தி அடையாத ஆன்மாக்கள் இக்கால கட்டத்தில் 'உருவமற்று; செயலற்று' மாயையாகிய கோளத்தில் கட்டுண்டு இருக்கும். பிரமனின் இரவுப் பொழுது முடிந்தவுடன் மீண்டும் மூன்று உலகங்களின் படைப்பு துவங்கப் பெறும். இக்கால அளவுகளின் படி, பிரமனுக்கு 100 ஆண்டுகள் கடந்தவுடன், பிரமன் சிவமுத்தி பெற்றுய்வு பெறுவார், மகாபிரளயம் தோன்றி 14 உலகங்களும் அழிவுறும். (தற்பொழுது படைப்புத் தொழில் புரிந்து வரும் பிரம்மாவுக்கு இவ்வகையில் 50 ஆண்டுகள் கடந்துள்ளது).

தற்பொழுது நடந்தேறி வருவது 'சுவேத வராக கல்பம்', இதன் 14 மன்வந்திரங்களில் நாமிருப்பது 7 ஆம் (வைவசுவத) மன்வந்திரத்தில். இம்மன்வந்திரத்தின் 71 சதுர்யுகங்களில் நாமிருப்பது 28ஆம் சதுர்யுகத்தில். தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தில் சுமார் 5100 ஆண்டுகளே கடந்துள்ளது. இக்கலியுகம் முடிவுற சுமார் 4,27,000 ஆண்டுகள் மீதமுள்ளது (முக்கியக் குறிப்பு: கலி முடிவில் பிரளயம் ஏற்படாது, கல்ப முடிவில் மட்டுமே பிரளய நிகழ்வு நடந்தேறும்).

No comments:

Post a Comment