தசாவதாரங்களின் வரிசையில் புத்தரும் ஒருவரா? முறையான விளக்கங்கள்:

பாற்கடல் வாசனான ஸ்ரீமகாவிஷ்ணு இது வரையிலும் எடுத்துள்ள அவதாரங்கள் ஒன்பது, இனி கலியுக இறுதியில் எடுக்கவிருக்கும் அவதாரம் ஒன்று, இனி இப்பத்து அவதாரங்களின் முறையான வரிசையினைத் தக்க சான்றுகளுடன் உணர்ந்துத் தெளிவோம்,

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரின் ஸ்ரீரங்கப் பாசுரத்திலிருந்து முதலில் துவங்குவோம்,

தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் -குறளாய்
மூவுருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் -முடிப்பான் கோயில்
-
பெரியாழ்வார் குறித்துள்ள தசாவதாரங்களின் வரிசை பின்வருமாறு, மீன் (மச்ச அவதாரம்), ஆமை (கூர்ம அவதாரம்), ஏனம் (வராக அவதாரம்), குறள் (இரண்டு அடிகளால் உலகங்கள் யாவையையும் அளந்த காரணத்தால் வாமன அவதாரத்தைக் குறள் என்று போற்றுகின்றார்), மூவுருவில் இராமனாய் (பரசுராமர், ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணனின் மூத்த சகோதரரான பலராமர்), ஸ்ரீகிருஷ்ண அவதாரம் மற்றும் கல்கி அவதாரம்.

அடுத்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தில் குறிக்கப் பெற்றுள்ள வரிசையையும் காண்போம்,

மீனோடு ஆமை கேழலாய் அரி குறளாய் முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய் கல்கியும் ஆனான்
-
மேற்குறித்துள்ள திருப்பாடல் வரிகளிலும் அதே வரிசை குறிக்கப் பெற்றுள்ளது, மீன் (மச்ச மூர்த்தி), ஆமை (கூர்ம மூர்த்தி), கேழல் (வராக மூர்த்தி), குறள் (வாமன மூர்த்தி), முன்னும் ராமனாய் (பரசுராமர்), தானே (ஸ்ரீராமர்), பின்னும் ராமனாய் (பலராமர்), தாமோதரனாய் (ஸ்ரீகிருஷ்ணர்), கல்கி.

உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ இணைய தளங்கள் பலவற்றிலுள்ள தசாவதாரப் படங்களில், 'பலராமருக்கு மாற்றாக புத்தரின் படம்' காணப் பெறுகின்றது. இது முற்றிலும் பிழையானது, எவ்வித ஆதாரமுமில்லாத பிற்காலத் திணிப்பு. புராணங்களும், அருளாளர்களின் திருப்பாடல்களும் 'கலப்பையோடு காட்சி அளிக்கும் பலராமரையே' தச அவதாரங்களில் ஒருவராக முன்னிறுத்துகின்றன (மெய்ப்பொருள் காண்பது அறிவு)!!!

No comments:

Post a Comment