இந்து தர்மம் (ஷண்மதமா (ஆறு மதங்களா) அல்லது ஒரு மதமா - ஆதாரபூர்வ நுட்பங்களும் விளக்கங்களும்):

'கொள்கைகள்; கோட்பாடுகளோடு கூடிய ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையினை 'மதம்' எனும் வரையறைக்குள் உட்படுத்த வேண்டுமாயின் அவற்றிற்கென்று தனியே ஒரு வேத நூலொன்று அமைந்திருத்தல் இன்றியமையாதது'. நமது பாரத தேசத்தில் எண்ணில் பலகோடி ஆண்டுகளாக நிலவி வரும் 'சைவம்; வைணவம்; கௌமாரம்; காணபத்தியம்; சாக்தம்; சௌரம்' எனும் ஆறு வழிபாட்டு முறைகளுமே தத்தமெக்கென்று தனித்தனி வேதநூலினைக் கொண்டிராமல் 'ரிக்; யஜுர்; சாம; அதர்வணம்' எனும் நான்மறைகளைப் பொதுவான வேதநூலாகக் கொண்டு விளங்குபவை, ஆதலின் இவையனைத்துமே ஒரே மதத்திற்குட்பட்ட சமயப் பிரிவுகளே அன்றி தனித்தனி மதங்களன்று என்பது தெளிவு.

இக்கருத்திற்கு 'வடமொழிப் புராணங்கள்; உபநிடதங்கள்; தீந்தமிழில் தோன்றிய புராணங்கள், சாத்திரங்கள் மற்றும் அருளாளர்களின் திருமுறைத் திருப்பாடல்கள் இவைகளிலிருந்து ஒருகோடி அகச் சான்றுகளைத் தரவுகளாகத் தரஇயலும். சிவபரம்பொருளை 'நான்மறைபாடும் பரம யோகி' என்று திருஞானசம்பந்தப் பெருமான் 'திருக்கள்ளில்' எனும் தலத்திற்கான தேவாரத் திருப்பதிகத்தில் போற்றுகின்றார். திருமூலர் திருமந்திரத்தில் 'வேதச் சிறப்பு' எனும் தனித்தலைப்பையே அமைத்தருளிப் போற்றுகின்றார்.
-
வேதத்தை விட்ட அறம்இல்லை! வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள!தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற்றார்களே!!!
'நன்கோது நால் வேதத்துள்ளான்' என்று நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியைப் போற்றுகின்றார் பேயாழ்வார். சரி வேதநூல் ஒன்றேயாய் இருப்பினும் தெய்வங்கள் வெவ்வேறாக உள்ளனவே? எனில், 'இந்து தர்மம் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்' எனும் ஒற்றைப் பரம்பொருள் தத்துவத்தை மையமாகக் கொண்டு விளங்குவது, எங்கும் யாவிலும் நீக்கமற நிறைந்தருளும் அப்பரப்பிரமமே ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சில முக்கியத் திருவடிவங்களில் தோன்றியருள் புரிகின்றது'. 'ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள்' என்றிதனைச் சுட்டுவார் அபிராமி பட்டர்.
-
சுடரோ சிவபெருமான் சூடு பராசக்தி
திடமார் கணநாதர் செம்மை - படரொளியோ
கந்தவேளாகும் கருதுங்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு?

மேலும் இந்த ஆறு பிரிவுகளையும் வேத வியாசர் துவாபர யுக காலகட்டத்தில், இன்றிலிருந்து சுமார் 5100 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியருளிய பதினெண் புராணங்களிலேயே தெளிவாகக் குறிக்கப் பெற்றுள்ளன, ஆதிசங்கரர் அவதரித்ததோ சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர், ஆதலின் 'ஆதி சங்கரர் இப்பிரிவுகளைத் தாமே புதிதாகத் தோற்றுவிக்கவில்லை மாறாக சிதறுண்டிருந்த (நான்மறைகளுக்கு உட்பட்ட) வழிபாட்டு முறைகளைப் புணரமைத்து இந்து தர்மம் (அல்லது வேத தர்மம்; மறை நெறி) எனும் ஒரு குடையின் கீழ் மீண்டும் புத்துணர்வு பெற்று மிளிரச் செய்தருளினார்' என்பதே சரியான புரிதல்.
எனில் 'ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதருக்கு ஷண்மத ஸ்தாபகர் எனும் திருப்பெயரும் உண்டே! அதனை எப்படிப் புரிந்து கொள்வது?, ஒரு சொல் எந்த வாக்கியத்தில் எந்த கருத்தில் எந்த கண்ணோட்டத்தில் கையாளப் படுகின்றது என்பதனை வைத்தே அதற்கு பொருள் கொள்ளுதல் வேண்டும்! 'ஒரு யானை மதம் பிடித்து ஓடியது' எனும் வாக்கியத்தில், மதம் எனும் சொல்லை ஆன்மீகத்தின் குறியீடாக எவரொருவரும் பார்ப்பதில்லை, அது போன்று 'ஷண்மத ஸ்தாபகர்' எனும் சொற் பிரயோகத்தில் 'மதம்' என்பது 'பிரிவுகள் அல்லது உட்சமயங்கள்' என்பதனையே குறிக்க வந்தது, தனித்தனி மதங்களை அல்ல (சிவாய நம!!!).

No comments:

Post a Comment