கந்தபுராண நிகழ்வுகள் நடந்தேறிய காலகட்டம் தான் என்ன (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

வால்மீகி இராமாயணம் - பால காண்டத்தின் 37ஆவது சர்க்கத்தில் பதிவு செய்யப் பெற்றுள்ள நிகழ்வுகளின் அடிப்படையில் கந்தபுராண நிகழ்வுகளின் காலகட்டத்தினை ஆய்வோம். விஸ்வாமித்திர மகரிஷி 'உலக நலனுக்காக தாம் புரியவிருக்கும் சிவவேள்வி, அசுரர்களால் தடையுறா வண்ணம் காத்துத் தரும் பொருட்டு' ஸ்ரீராமர் மற்றும் இலக்குவன் இருவரையும் உடனழைத்துச் செல்கின்றார், யாகம் இனிதே நிறைவுற்றுப் பின் தாடகை வதமும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் நடந்தேறுகின்றது. பின்னர் ஜனக மன்னரின் அழைப்பினையேற்று அனைவரும் மிதிலா நகருக்குப் பயணிக்கின்றனர். செல்லும் வழியில் எண்ணிறந்த புராண நிகழ்வுகளைத் தசரத மைந்தர்களுக்கு விவரித்தவாறு செல்கின்றார் மகரிஷி.
’இடையில் கங்கையைக் கடக்க நேரிடும் சமயத்தில் ஆறுமுக தெய்வத்தின் திருஅவதார நிகழ்வுகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றார் மகரிஷி' என்று வால்மீகி முனிவர் பதிவு செய்தருளியுள்ளார். இதனால் கந்தபுராண காலகட்டம் 'இராமாயண நிகழ்வுகள் நடந்தேறியுள்ள திரேதா யுக காலத்தினின்றும் மிகவும் முற்பட்டது' என்பது தெளிவு. தற்பொழுது நடந்தேறி வரும் 4ஆம் யுகமான கலியுகம் துவங்கப் பெற்று சுமார் 5130 வருடங்கள் கடந்துள்ளன, இதற்கும் 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகம் மட்டுமே சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகளைக் கொண்டதாகும்.

ஆதலின் சிவகுமாரன் எழுந்தருளியிருக்கும் அறுபடை வீடுகளும் அத்தனை லட்சம் ஆண்டுகள் புராதனமானவை. இந்நெடிய காலகட்டத்தில் இத்திருக்கோயில்கள் எண்ணிறந்த முறை சிதிலமடைந்தும் பின் செப்பனிடப் பெற்றும் வந்திருக்கக் கூடும், எனினும் இத்தலங்களில் எழுந்தருளியுள்ள விக்கிரக மூர்த்தங்கள் காலவரையற்ற தொன்மையினைக் கொண்டு விளங்குபவை எனும் புரிதல் மிக அவசியம் (சிவாய நம)!!!

No comments:

Post a Comment