இந்து தர்மம் 'மதமா அல்லது வாழ்வியலா?' (ஒரு தெளிவான பார்வை):

இந்து தர்மம் 'தனிப்பட்ட ஒரு மதம் அல்ல அது ஒரு வாழ்வியல்' என்பது போன்ற வாசகங்கள் முகநூல் பதிவுகளில் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. இவ்விதமான கருத்துக்களைப் பகிர்வோர் 'இந்து மதத்தின் மீது பற்றுள்ளவர்' என்பதில் ஐயமில்லை, இவர்களின் நோக்கத்திலும் குற்றமில்லை இருப்பினும் இவ்வகையான பிரச்சாரங்கள் 'தற்சமயம் நிலவி வரும் சூழலில்' நலன் பயக்கக் கூடியவையா என்பது குறித்துச் சிறிது சிந்திப்போம்.

இந்து தர்மம் 'உபநயனம்; திருமணம்; புதுமனைப் புகுவிழா உள்ளிட்ட ஒவ்வொரு நிகழ்விலும் சடங்கிலும் பின்னிப் பிணைந்திருக்கின்றது, அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் தக்கது; தகாதது எனும் வரைமுறைகளை வகுத்துத் தருகின்றது, வாழும் பொழுது மட்டுமல்லாது ஒருவர் உயிர் நீத்தபின்னரும் புரியப் படவேண்டிய நியமங்களை அறிவிக்கின்றது, தனிமனித ஒழுக்கம் மற்றும் சமுதாய நலன் சார்ந்த கோட்பாடுகளை முன்மொழிகின்றது' ஆதலின் இதனை வாழ்வியல் என்று விவரிப்பது என்பது முற்றிலும் பொருத்தமானதே.

எனினும் 'இந்து தர்மம் மதமே அல்ல - ஒரு வாழ்வியல்' என்று குறிக்கையில் அது தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுகின்றது. இந்து தர்மம் பன்முகத் தன்மை கொண்டது, அவற்றுள் மதமும் முக்கியமான ஒரு பரிமாணம் என்பதை எக்காரணம் கொண்டும் மறுத்து விட இயலாது. பலகலைகளில் தேர்ச்சியும், மிருதங்கத்தில் சிறப்புப் பயிற்சியும் உள்ள ஒருவரைப் பற்றி விவரிக்கையில் 'இவர் மிருதங்க வித்துவான் மட்டுமல்லாது பலகலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளவர்' என்று கூறுவதே பொருந்தும், அதை விடுத்து 'இவர் மிருதங்க வித்துவானே அல்ல, பல கலைகளிலும் வல்லவர்' என்று கூறுவது ஏற்புடையதாக இருக்காது.  

'வாழ்வியல்' எனும் சொல் பொதுவில் 'மதம் சார்ந்த ஆன்மீக பயணத்தினையும் கோட்பாடுகளையும்' குறிப்பதில்லை, ஒரு சிலர் அவ்வாறு கருதக் கூடும் என்பதால் அது வெகு ஜன மக்களுக்கான புரிதலாக மாறி விடாது. 'மனித நிலையிலிருந்து அனைத்து தரப்பினரையும் இறை நிலைக்கு இட்டுச் செல்லும் பயணத்தைக் குறிப்பது மதம், மறுபிறவி; பிறவியின் வகைகள்; வினைகள் மற்றும் அதற்கான விளைவுகள் குறித்த கோட்பாடுகளைக் குறிப்பது மதம், அனைத்திற்குள்ளும், அனைத்திலிருந்து வேறுபட்டும் நின்றருளும் பரம்பொருளின் தன்மைகளைக் குறிப்பது மதம், பிறவியின் பயனான முத்தி வகைகளைக் குறிப்பது மதம், இறைவனின் பல்வேறு அவதாரங்களையும் திருத்தலங்களையும் அடியவர் பெருமக்களையும் பறைசாற்றுவது மதம்', இப்படி 1000 விதமாகக் கூறிக் கொண்டே செல்லலாம். 

புரிதலற்ற மதமாற்றம் பாரத தேசமெங்கிலும் பரவி வரும் மிகவும் இக்கட்டான இச்சூழலில் 'இந்து தர்மம் ஒரு மதமே அல்ல' என்று முழங்குவது பெரும் குழப்பத்தினை மட்டுமே விளைவிக்கும், எவ்வித நன்மையையும் ஏற்படுத்தி விடாது. ஒரு பிரச்சாரம் எவ்வகையான சூழலில், எத்தகைய காலகட்டத்தில் மேற்கொள்ளப் படுகின்றது என்பதனைப் பொறுத்தே அதன் பயனும் அமையும். ஆதலின் இந்து தர்மம் 'ஒரு மதமே' என்று தெளிவுறுவோம், பிறருக்கும் தெளிவுறுத்துவோம் (சிவ சிவ)!!!!

No comments:

Post a Comment