கிரக வழிபாடுகளும் பரிகாரங்களும் அவசியமா?

எண்ணில் பலகோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள, நல்வினை; தீவினைக் குவியல்களை சஞ்சித வினைகளென்றுச் சாத்திரங்கள் பேசுகின்றன. பிறவியெடுக்கும் ஒரு ஆன்மாவானது அப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டிய, சஞ்சித வினைகளினின்றும் எடுக்கப் பெறும் ஒரு சிறு பகுதியே 'பிராரப்த வினை' என்று குறிக்கப் பெறுகின்றது.

நமது பிராரப்த வினைகளாலேயே நன்மை - தீமைகள் விளைகின்றனவேயன்றி கிரகங்களால் ஒருபொழுதும் அல்ல; அல்ல;அல்ல எனும் தெளிவான புரிதல் முதலில் அவசியமாகின்றது. 'அவ்வினைக்கு இவ்வினை' என்பார் திருஞானசம்பந்த மூர்த்தி. ஆன்மாக்களின் பிராரப்த வினைகளை உரிய காலத்தில், உரிய விதத்தில் சேர்ப்பிக்கும் நவ கோள்களும் 'அஞ்சலைத் தக்கோரிடத்துச் சேர்ப்பிக்கும்' தபால்காரரைப் போன்றவைகளே. வழிபாடுகளை ஏற்று, தீய பலன்களை மாற்றியமைக்கும் அதிகாரம் இறைவனால் இக்கோள்களின் அதிதேவதைகளுக்கு வழங்கப் படவில்லை.

குறிப்பிட்ட ஒரு கிரகம் நம்முடைய ராசிக்குச் சாதகமல்லாத கட்டமொன்றிற்கு வருமாயின் நமது பிராரப்த வினைகளிலிருந்துத் தீவினைப் பயன்களை மிகுதியாகவும், சாதகமான கிரகச் சூழலில் நல்வினைப் பயன்களை மிகுதியாகவும் நம்மை நுகருமாறுச் செய்வதே கோள்களின் பணியாகும். அது விடுத்து, நம் பிராரப்த வினைகளுக்குத் தொடர்பில்லாத புதியதொரு நல்வினை; தீவினையை கிரகங்களால் என்றுமே நூதனமாக உருவாக்கித் தந்துவிட இயலாது.

சனி கெடுப்பார்; குரு கெடுப்பார் என்று கூறி வருவதே பிழையான பிரயோகம், நாம் புரிந்து வந்துள்ள எண்ணிறந்த தீவினைகளே நம்மைத் தொடர்ந்து வந்து கெடுக்கின்றன என்று அவ்வப்பொழுது நினைவு கூர்தல் அவசியம்.

ஒன்பது நவகிரகத் திருத்தலங்களும் அடிப்படையில் சிவ ஷேத்திரங்களே, இத்தலங்களில் சிவபரம்பொருளை வழிபடுவதால் தோஷ நிவாரணம் கிட்டுமேயன்றிக் கிரக வழிபாட்டினால் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை. நம்மைப் போன்றே கிரங்கங்களின் அதிதேவதைகளுக்கும் ஆயுட்கால வரையரை உண்டு, அதன் பின்னர் புதியதொரு அதிகாரி அந்தந்த கிரங்கங்களுக்கு இறைவனால் நியமிக்கப் பெறுவார்.
*
பெயர்ச்சியன்று மட்டும் ஆலய வழிபாடு புரிந்து விட்டு பிற நாட்களில் நம் வாழ்வியல் முறைகளில் வேறெந்த விதமான மாறுதல்களையும் கொண்டு வரவில்லையெனில் எவ்வித அதிசயமும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

சாதகமல்லாத பெயர்ச்சிக் காலத்தில் நாம் பதறுவது ஒரு புறமிருக்கட்டும், 'எதனால் நமக்குத் தீவினைகள் வருகின்றன? சாத்திரங்கள் எந்தெந்த செயல்களைச் செய்யாதே என்று வலியுறுத்துகின்றது' எனும் புரிதலையும் சேர்த்தே வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும், இல்லையெனில் புரிந்த தவறுகளையேப் புரிந்து வினைச் சூழலில் உழன்று கொண்டிருக்கும் நிலை உருவாகும்.

புண்ணிய தலங்களுக்குச் சென்று தரிசித்தல் மற்றும் திருத்தொண்டு புரிதல், புண்ணிய நதிகளில் நீராடுதல், திருக்கோயில்களில் (இறைவனின் பொருட்டு) தீபமேற்றி வழிபடுதல், அருளாளர்களின் திருப்பதிகங்களை உள்ளன்புடன் ஓதி வருதல், பிற உயிரினங்களின் கதறல்களிலிருந்துத் தோன்றும் மாமிசம் உட்கொள்வதை அறவே தவிர்த்தல், எளியவர்களுக்கு இயன்ற பொழுதெல்லாம் உதவி வருதல், உயிர்களின் இடர்களை நீக்குதல் ஆகியவை மட்டுமே பாதகமான கிரகச் சூழலிலிருந்து நம்மை காத்துதவும் அரண்களாக அமையும் (சிவ சிவ).

2 comments:

  1. நல்ல விளக்கம் நுட்பாமானபதிவு பணிமேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சரியாக விளக்கியமைக்கு நன்றி, தங்களின் இப்பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete