இந்து மதம் (இராமாயண, மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறி எவ்வளவு ஆண்டுகள் கடந்துள்ளன?):

ஸ்ரீகிருஷ்ண அவதாரம் 'தற்பொழுது நடைபெற்று வரும் கலியுகத்தின் முந்தைய யுகமான துவாபர யுகத்தின் இறுதி 150 ஆண்டுகளுக்குள்' நிகழ்ந்தேறியுள்ளது என்று வியாச மாமுனிவரின் இதிகாசம் நமக்கு அறிவிக்கின்றது. கலி தொடங்கி சுமார் 5100 ஆண்டுகள் கடந்துள்ளது எனில் மாபாரத நிகழ்வுகள், அவை நடந்தேறிய தலங்கள், அத்தலங்களில் குறிக்கப் பெற்றுள்ள திருக்கோயில்கள் இவையாவும் குறைந்த பட்சம் 5100 ஆண்டுகள் தொன்மையானவை எனும் முடிவிற்கு எளிதாக வந்துவிடலாம்.

ஸ்ரீராமாவதாரம் 'துவாபர யுகத்திற்கு முன்னதான திரேதா யுகத்தின் இறுதியில், யுக நிறைவு பெற 12,000 ஆண்டுகளே மீதமிருந்த நிலையில், அயோத்தியில்' நிகழ்ந்தேறியுள்ளது. இராவண சம்ஹாரத்திற்குப் பின்னர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சுமார் 11,000 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தருளியதாக உத்தர இராமாயணம் பதிவு செய்கின்றது. தற்பொழுது நடந்தேறி வரும் 4ஆம் யுகமான கலியுகத்திற்கும், 2ஆம் யுகமான திரேதா யுகத்திற்கும் இடையிலுள்ள துவாபர யுகத்தின் கால அளவு மட்டுமே 'எட்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரம் (8, 64,000)' ஆண்டுகள்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தம்முடைய அவதாரக் காலத்தில் '(இராமேஸ்வரம் உள்ளிட்ட) எண்ணிறந்த சிவாலயங்களைப் புதுக்கியும், தரிசித்தும், போற்றியும் வந்துள்ளார்' என்று அந்தந்த தல புராணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன, அவை அனைத்துமே சுமார் 8 1/2 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பதே நினைவிலிருத்த வேண்டிய முக்கியக் குறிப்பு. மேலும் இந்நெடிய காலகட்டத்தில் அத்திருக்கோயில்கள் பல்லாயிரம் முறை சிதிலமடைந்துப் பின்னர் புணர்நிர்மாணம் கண்டு வந்திருக்கக் கூடும் எனினும் 'அவ்வாலயங்களிலுள்ள மூல மூர்த்தி மற்றும் பிற விக்கிரக மூர்த்தங்கள் மிகமிகப் புராதனமானவை' எனும் புரிதல் அவசியம்.

No comments:

Post a Comment