சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி (மதங்கள் பொய்யா ? சில நுட்பமான விளக்கங்கள்):

வள்ளலார் திருவருட்பாவில் 'மதமும் சமயமும் பொய்' என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவரான சிவபெருமான் தனக்கு உணர்த்தியதாகப் பதிவு செய்கின்றார், 'தெய்வ மணி மாலை' எனும் பாடல் தொகுப்பிலும் 'மதமான பேய் பிடியாது இருக்கவேண்டும்' என்று கந்தக் கோட்ட முருகப் பெருமானிடம் வேண்டுகின்றார். மிகவும் நுட்பமாக விளங்கிக் கொள்ள வேண்டிய வாக்கியமிது. 'மதம்' எனும் பதத்திற்கு என்ன பொருள் கொள்வது? மனிதனை உயர் நிலை ஞானத்துக்கு இட்டுச் செல்லவும், இறைவனை அடைவிக்கவுமாய் வழிவழியாய் நம் சமயச் சான்றோர் பின்பற்றியும் வழிமொழிந்தும் வந்துள்ள கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளையே மதம் என்று பொதுவில் குறிக்கின்றோம்.

வள்ளலாரின் கோட்பாடுகளும் இதே நோக்கங்களையே முன்வைக்கின்றது அவ்விதமிருக்க 'மதம் பொய்' என்று வள்ளலார் குறிப்பதன் உட்கருத்து தான் என்ன? மதம் என்ற பதத்துக்குச் 'செருக்கு' என்றொரு பொருளுமுண்டு, அதீதமான; மித மிஞ்சிய நிலையையும் அது சுட்டுகின்றது, இனி மதங்களின் பெயரால் நடந்தேறும் முறைகேடுகளைக் காண்போம்.

பல தெய்வ வடிவங்களின் வழிபாடு நிலவி வரும் ஒரு மதத்தில், ஒவ்வொரு வடிவத்தின் உபாசகரும் பிற தெய்வ வடிவங்களைக் கடுமையாக நிந்திப்பது; மதம் அறிவுறுத்தும் தர்மங்களைப் பின்பற்றுவதை விடுத்து எந்நேரமும் சமய வாதங்களைப் புரிந்து கொண்டிருப்பது; அம்மதத்தின் மற்ற பிரிவினரைக் கடுமையாக விமரிசிப்பது அல்லது இகழ்வது;

மற்றொரு புறம் பிற மதங்களின் தெய்வங்களை மிகவும் தரக் குறைவாகப் பேசியும், கோடிக்கணக்கில் பணத்தை வாரியிரைத்தும் மதமாற்றத்தில் ஈடுபடுவது; பிற மதங்களின் தத்துவங்களைத் தாங்களே உருவாக்கியது போல் போலியாகச் சித்தரித்துப் பிரச்சாரம் செய்வது; சேவை நிறுவனங்கள் எனும் போர்வையில் பற்பல மருத்துவ மனைகளை உருவாக்கி முழுநேர மதமாற்றத்தில் ஈடுபடுவது; வீடு வீடாகச் சென்று பிற மதத் தெய்வங்கள் சாத்தான்கள் என்று பிதற்றித் திரிவது; தங்கள் கடவுள் மட்டுமே சுவர்க்கம் அளிப்பவர்; மற்ற மதத்தினர் நரகம் செல்வர் என்று மனநோய் கொண்டு பேசித் திரிவது; பிற மத தெய்வங்களைப் போலவே தங்கள் தெய்வத்தையும் வடிவமைத்துக் குழப்பிப் பின் மதமாற்றுவது; அரசியல் பலம் மூலம் வற்புறுத்தி மதமாற்றுவது;

பிற மதத்து ஆண் மற்றும் பெண்களைக் காதல் எனும் வலையில் சிக்க வைத்துப் பின் மதமாற்றுவது; மற்ற மதத்தினரைக் கொல்வதே இறைவனுக்குப் புரியும் பெரும் தொண்டு என்று வரைமுறையற்ற வன்முறையில் ஈடுபடுவது; பிற மதச் சின்னங்களை அடியோடு அழிப்பது; பிற மத வழிபாட்டுத் தளங்களைத் தகர்ப்பது; பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலை மிரட்டல் மூலம் மதமாற்றம் புரிவது;

மேற்கூறப்பட்ட செயல்களனைத்தும், மதம் என்ற எல்லையைத் தாண்டி மித மிஞ்சிய நிலையில் புரியப்படும் சகிக்க முடியாத முறைகேடுகள் ஆகும். பிற உயிர்களுக்குச் சிறிதும் தீங்கிழைக்காமல் ஞானப் பாதையில் பயணிப்பதே மதத்தைப் பின்பற்றுபவரின் மேலான நோக்கமாக இருத்தல் வேண்டும்.

அகிம்சையை முன்னிருத்தும், சரியான கோட்பாடுகளோடு கூடிய ஒரு மதம் சர்வ நிச்சயமாய் மனித இனத்தை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும். பரம புண்ணியமான நம் பாரத தேசத்தில் எண்ணிறந்த அருளாளர்களும்; ஞானிகளும்; ஆச்சாரியர்களும் உத்தமமான நமது இந்து தர்மத்தினைப் பின்பற்றியே பிறவாப் பெருநிலையினை எய்தியுள்ளனர். வள்ளலார் மதங்களைக் கண்டிக்கவில்லை, மதங்களின் பெயரால் நடந்தேறும் இத்தகு முறைகேடுகளையே 'பொய்' என்று நிந்திக்கின்றார் (சிவ சிவ)!!!

No comments:

Post a Comment