தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டு வரும் திருநாவுக்கரசர் திருப்பாடல்: திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கமும் சில நுட்பங்களும்:

தவறான புரிதலுடன் மேற்கோள் காட்டப்பட்டு வரும் நாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள 'சங்கநிதி பதுமநிதி' என்று துவங்கும் தேவாரத் திருப்பாடலின் இறுதி 4 வரிகளை இப்பதிவில் பல்வேறு கோணங்களில் சிந்தித்துத் தெளிவோம்.
-
அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே!!

மேற்குறித்துள்ள வரிகளை மேலோட்டமாக அணுகினால் "பசுவின் மாமிசத்தினை உண்டுழல்பவராக இருப்பினும் கங்கையைத் திருமுடியினில் சூடியருளும் சிவபரம்பொருளின் அடியவராக இருப்பின் அவரும் வணங்கத் தக்கவரே" என்று நாவுக்கரசு சுவாமிகள் தெரிவிப்பது போலத் தோன்றும். இதற்கான வாரியார் சுவாமிகளின் முறையான விளக்கத்தினை முதலில் காண்போம்,

"பசுவினைக் கொன்று அதன் மாமிசத்தை உரித்துண்ணும் கொடிய வழக்கம் உள்ளவராகிலும், ஞானிகளின் திருவாக்கினை கற்றறிந்து, அச்செயல் பெரும் தவறு என்றுணர்ந்துத் திருந்தி அவ்வழக்கத்தை முற்றிலுமாய் கைவிட்டுச் சிவபெருமானிடம் உளமுருகி மன்னிப்பு வேண்டிப் பின் பரமேசுவரரின் அடியவராக தன்னை முழுவமதுமாய் மாற்றிக் கொள்வாராயின், அடியவர் எனும் கோணத்தில் அத்தகையோரும் வணங்கத் தக்க நிலையினைப் பெறுவர்' என்று இதன் உட்கருத்தினைத் தெளிவுறுத்துகின்றார் வாரியார் சுவாமிகள்.
மேற்குறித்துள்ள வாரியார் சுவாமிகளின் விளக்கவுரையினைச் சிறிது விரிவுபடுத்திச் சிந்திப்போம். அருளாளர்களின் திருப்பாடல்களுக்கு நம் மனம் போன போக்கிலெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது, சமயச் சான்றோர் மூலமாகவே அவைகளின் உட்கருத்தினை உணர்ந்துத் தெளிவுருதல் வேண்டும். மேலும் திருமுறைப் பாடல்களுக்கு, அதனைப் பாடியருளிய அருளாளரின் பிற திருப்பாடல்களுக்கும், மற்ற திருமுறை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ள கருத்துகளுக்கும் முரண்படாத வகையில் பொருள் காணுதலே ஏற்புடையது.

திருமந்திரத்திலும் பிற சைவத் திருமுறைகளிலும் புலால் மறுத்தலும் கொல்லாமையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பொழுது அப்பர் சுவாமிகள் உயிர்க் கொலையை எவ்வாறு ஞாயப்படுத்தியிருக்க இயலும் என்று சிந்தித்துத் தெளிதல் வேண்டும். இராவணனும் வாலியும் சிவ பக்தர்களாக அறியப்படுபவராயினும் வணங்கத் தக்க நிலையினைப் பெற்றார்களா எனில் இல்லை, நாவுக்கரசு சுவாமிகள் இராமேச்சுரம் தல தேவாரத் திருப்பாடல்களில் இராவணனை கொடிய; நெறியற்ற; ஒழுக்கமற்ற அரக்கன் என்று கடுமையாக நிந்திக்கின்றார்.

பிறன் மனை நயந்த அதர்மச் செயலுக்காக 'இராவணன்; வாலி' இருவருமே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் வதைக்கப்பட்டுள்ளது தெளிவு. தர்மம் கைக்கொள்ளப்படாத நிலையில் பக்தியால் பயனேதும் விளையாது, சாத்திரம் விதித்துள்ள தர்மங்களைப் பின்பற்றியவாறு இறைவழிபாடு புரிதலே பக்தியேயன்றி அனைத்து வித அக்கிரமங்களையும் புரிந்து கொண்டே மற்றொரு புறம் சிவபூசையும் செய்து வருவது பாதகச் செயலே. சரி 'எது தான் தலையாய தர்மம்?' எனில் எந்தவொரு உயிரினத்திற்கும் ஒருசிறிதும் மன மெய் வாக்கினாலே துன்பம் விளைவிக்காத அகிம்சையையே மிக உயர்ந்த தர்மமாக நம் இந்து மதம் முன்னிறுத்துகின்றது.

தர்ம சாத்திரங்கள் மற்றும் ஞானிகளின் திருவாக்கினைச் செவிமடுப்போம், மிகக் கொடூரமாக வதைக்கப் பெற்று துடிதுடித்து மடியும் உயிரினங்களின் மாமிசத்தை சுவைத்துண்ணும் பழக்கத்தினை இக்கணமே துறப்பதாகச் சபதமேற்போம், சிவபரம்பொருளின் திருவருள் கைகூடப் பெறுவோம்.

No comments:

Post a Comment