வள்ளல் பெருமானாரின் பார்வையில் மனிதகுலத்தின் இரு பிரிவுகள்:

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் வழியிலேயே 'மனித குலத்தில் சாதி; குலம் என்ற எவ்விதமான பிரிவினைகளும், பேதங்களும், பாகுபாடுகளும் கூடாது' என்று வலியுறுத்திய வள்ளல் பெருமானார் கருணையின் அடிப்படையில் மனித இனத்தினை இரண்டாகப் பிரிக்கின்றார். ஜீவ காருண்யம் உள்ளோர் 'அக இனத்தார்' என்றும் ஜீவகாருண்யமற்றுப் பிற உயிர்களின் துன்பத்திற்குச் சிறிதும் இரங்காது 'வாயிலாப் பிராணிகளை வதைத்தல் மற்றும் அவைகளின் மாமிசத்தினைப் புசித்தல்' ஆகிய செயல் புரிவோரைப் 'புற இனத்தார்' என்றும் வகைப்படுத்துகின்றார்.

அருள் விளக்க மாலை: திருவருட்பா 6ஆம் திருமுறை - திருப்பாடல் 71:
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்ற அருள் இறையே
மயர்ப்பறு மெய்த்தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும்
மாநடத்து என் அரசே என் மாலை அணிந்தருளே!!!
ஜீவகாருண்யம் இல்லாது ஆன்மீகப் பயணத்தில் ஒருசிறிதும் பயன் ஏற்படப் போவதில்லை எனும் பிரதானக் கொள்கை விளக்கத்தால் தமது 'வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தின்' திருவாயிலில் 'கொலைத் தொழில் புரிபவரும், புலால் எனும் மாமிசம் உட்கொள்வோரும் உள்ளே புகுதல் கூடாது' எனும் கட்டளையைப் பொறித்தருளினார். உயர்நிலை சிவஞானம் சித்திக்கப் பெற்ற வள்ளலாரின் அறவுரையைச் செவிமடுப்போம். இக்கணமுதல் அசைவம் உட்கொள்வதை முழுவதுமாய்த் துறந்து வள்ளலார் குறித்துள்ள அக இனத்தவராக நம்மைப் பரிணமித்துக் கொள்வோம், வடலூர் சென்று இதுவரையிலும் நேர்ந்துள்ள ஜீவகாருண்யப் பிழைக்கு வள்ளல் பெருமானிடம் உளமார மன்னிப்பு வேண்டி, மாதந்தோறும் பூச நன்னாளில் நடந்தேறும் சோதி தரிசனம் பெற்றுச் சிவகதி சேர்வோம்.

No comments:

Post a Comment