மகாபாரதம் அறிவுறுத்தும் அகிம்சை மீறலுக்கான தண்டனைகள் (அனுசாசனப் பர்வம்):

அம்புப் படுக்கையிலுள்ள பீஷ்மர் யுதிஷ்டிரனின் 'அகிம்சை மற்றும் மாமிசம் உட்கொள்வது தொடர்பான கேள்விகளுக்கு' எண்ணிறந்த நீதிகளை விடைகளாக எடுத்துரைக்கும் நிகழ்வினை அனுசாசனப் பர்வத்தின் 115, 116, 117, 118 ஆகிய பகுதிகள் மிகவும் விரிவாகப் பேசுகின்றன. இனி அவற்றுள் கூறப் பெற்றிருக்கும் தர்மங்களை சிந்தித்துத் தெளிவோம்.

தன்னுடலினை வளர்க்க பிற உயிர்களின் மாமிசத்தை உட்கொள்பவர் பேரிடர்களைச் சந்திப்பது உறுதி. மனித இனத்தைப் போலவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் தத்தமது உயிரும் சுவாசமும் மிகவும் பிரியமான ஒன்றாகும், உயர்ந்த ஞானத்தினைக் கொண்டிருப்போருக்கே மரணத்தைக் குறித்த பயமிருப்பது இயற்கையான நியதியெனில் ஏதுமறியாத வாயில்லாப் பிராணிகளின் நிலையினை எண்ணிப் பார்த்து தெளிதல் வேண்டும் (பகுதி 115).

மாமிசத்தின் பொருட்டு உயிரினங்களைக் கொல்வோருக்கும், அதனை உட்கொள்வோருக்கும் ஒவ்வொரு பிறவியிலும் குறைஆயுளே கிட்டும். மேலும் இத்தகையோருக்கு அபாயகரமான சூழல் ஏற்படும் சமயங்களில் எவரொருவராலும் இவர்களுக்குப் பாதுகாப்பு கிட்டாது. ஆதலின் தன் சொந்த நலத்தின் பொருட்டாவது ஒவ்வொருவரும் மாமிசம் உட்கொள்வதை அறவே துறத்தல் வேண்டும் (பகுதி 115).
தன் உடலினை வளர்க்கும் பொருட்டு பிற உயிரினங்களின் மாமிசத்தினை உட்கொள்பவருக்கு எந்தவொரு பிறவியிலும் இன்பமே கிட்டாது, எந்நேரமும் பதட்ட நிலையிலேயே உழன்று கொண்டிருக்கும் நிலை ஏற்படும், மேலும் அத்தகையோருக்கு அடுத்து வரும் பிறவிகளில் மனிதப் பிறவி வாய்க்காது; பல்வேறு உயிரினங்களாகப் பிறந்தும் இறந்தும் உழன்ற வண்ணமிருப்பர் (பகுதி 115).

மாமிசம் உட்கொள்பவர் ஐயத்திற்கு இடமில்லாது நரக வேதனையை நுகர்வர். மற்றொரு புறம் அகிம்சையைக் கைக்கொண்டு மாமிசம் தவிர்ப்பவரோ பிறவிகள் தோறும் நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் மற்றும் மனமகிழ்ச்சியோடு வாழ்ந்திருப்பர். எந்தவொரு துன்பமும் தனக்கு நேரக்கூடாது என்றெண்ணுபவர் பிற உயிர்களின் கதறலிலிருந்து தோன்றும் மாமிசத்தினை அறவே துறத்தல் வேண்டும் (பகுதி 115).

உட்கொள்வதற்கு எண்ணற்ற பிற உணவு வகைகள் இருக்க (பிற உயிர்க்குக் கடும் துன்பம் விளைவித்து) உயிரினங்களின் மாமிசத்தினை விரும்பி உட்கொள்பவர் ராட்சச இனத்தினரெனவே கொள்ளப்படுவர், இவர்கள் கும்பிபாகம் எனும் நரகத்தில் கடும் வேதனைக்கு உள்ளாவர் (பகுதி 116).

எவரொருவர் பிற உயிரினங்களின் மாமிசத்தினைப் புசிப்பரோ அவ்வுயிரினமாகவே அடுத்த பிறவிகளில் பிறப்பெடுத்து அதே முறையிலேயே வதைத்துக் கொல்லப்பட்டு உட்கொள்ளப் பெறுவார், இது சத்தியம் (பகுதி 116)

No comments:

Post a Comment