அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ள ஆறு பாதகச் செயல்கள் (திருச்செந்தூர் திருப்புகழ் நுட்பங்கள்):

அருணகிரிப் பெருமான் 'அனிச்சம் கார்முகம் வீசிட' என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழில் ஆறு விதமான தகாத செயல்களுக்காகத் தன்னைத் தானே கடுமையாக நிந்தித்துக் கொள்கின்றார். சிவஞானம் கைவரப் பெற்ற ஞானிகள் சுயநிந்தனை செய்து கொள்வது 'ஆன்மாக்கள் தத்தமது குற்றங்களை இவ்வித சுயபரிசோதனை மூலம் அறிந்துணர்ந்துப் பின் அதனின்றும் விலகி நிற்றலின் பொருட்டே' எனும் தெளிவான புரிதலுடன் இப்பதிவிற்குள் பயணிப்போம்,

அருக்கன் போலொளி வீசிய மாமரகதப் பைம் பூணணி வார்முலை மேல்முகம் அழுத்தும் பாவியை:- இல்லற தர்மத்திற்குப் பொருந்தாத முறையற்ற காமத்தில் எந்நேரமும் திளைத்திருக்க விரும்பும் பாவியை

ஆவி ஈடேறிட நெறிபாரா வினைச் சண்டாளனை:- எடுத்துள்ள இப்பிறவியில் ஆன்மா மும்மலங்களினின்றும் விடுபட்டு சிவமுத்தி பெற்றுய்யும் வழியை ஆய்ந்துணராத பரம சண்டாளனை

வீணனை நீள் நிதி தனைக் கண்டு ஆணவமான நிர்மூடனை:- செல்வத்தின் நிலையாத் தன்மையை உணராமல் அதன் பொருட்டு செருக்குற்றுப் பிறிதொருவருக்கு அச்செல்வத்தினை ஈயாது திரியும் முழு மூடனை

விடக்கு அன்பாய் நுகர் பாழனை:- பிற உயிரினங்களின் துன்பத்தினின்றும் தோன்றும் மாமிசத்தினை மிகுந்த ஆசையுடன் சுவைத்து உண்கின்ற பாழானவனை

ஓர் மொழி பகராதே விகற்பம் கூறிடு மோக விகாரனை: (ஆறுமுக தெய்வத்தின்) ஒப்புவமையற்ற சடாக்ஷர மந்திரத்தினை ஓதாமல், சாத்திர விரோதமாகவே எந்நேரமும் பேசிக்கொண்டிருக்கும் காம விகாரம் பொருந்தியவனை

அறத்தின் பால் ஒழுகாத மூதேவியை:- (ஞானிகளின் திருவாக்கினின்றும், சாத்திரங்களினின்றும்) எது அறம் என்றறிந்து அவ்வழியில் நின்றொழுகாத மூதேவியை

அருணகிரியார் அருளியுள்ள அறநெறியின் வழிநிற்றலே அப்பரம குருநாதரைப் போற்றும் உத்தம மார்க்கமாகும். அது விடுத்து 'படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்' என்பது போல், திருப்புகழையும் ஒருபுறம் பாராயணம் புரிந்து கொண்டு மற்றொருபுறம் மாமிச பழக்கத்தினையும் கொண்டிருப்பதென்பது விழலுக்கிறைக்கும் நீருக்கு ஒப்பாகும். 'விடக்கு' என்று அருணகிரியார் குறித்துள்ள மாமிசத்தினை உட்கொள்ளும் தீச்செயலை அறவே துறப்பதாக இன்றே சபதமேற்போம். திருவருள் கைகூடப் பெறுவோம். சிவ சிவ!!!

No comments:

Post a Comment