குழந்தைகளும் அசைவமும் (மனதில் இருத்த வேண்டிய மிக முக்கிய நுட்பங்களும் விளக்கங்களும்):

பொதுவாக அசைவம் உட்கொள்ளும் பழக்கமுடைய குடும்பங்களில் பெற்றோர் தத்தமது குழந்தைகளுக்கு 1-1/2 முதல் 2 வயதிற்குள் உணவினுள் சிறு அளவில் மாமிசம் கலந்தளிக்கத் துவங்குகின்றனர். உணவின் பேதமறியா அக்குழந்தைகளும் வாரம் இருமுறையேனும் அசைவம் உட்கொள்ளும் சூழலுக்கு மெதுமெதுவே பழக்கப்படுகின்றது. பின்னர் அக்குழந்தை வெவ்வேறு பருவங்களைக் கடப்பினும் சுமார் 20 முதல் 25 வருடங்கள் தொடர்ந்து வரும் அசைவ வழக்கத்தால் 'அசைவம் ஒரு உயிர் எனும் எண்ணம் அறவே அழிந்து அதுவும் தாவர உணவினைப் போல மற்றொரு உணவு வகை' எனும் எண்ணம் ஆழ்மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுகின்றது. இக்கால கட்டத்தில் கூடுதலாக உடலும் மனமும் அச்சுவைக்கு பூரண அடிமையாகி விடுகின்றது.

இந்நிலையிலுள்ள மனதுக்கு தர்ம சாத்திரங்களில் உள்ள 'கொல்லாமை; புலால் மறுத்தல்' எனும் கருணை சார்ந்த அறங்களை உள்வாங்கிக் கொள்வது மிகவும் கடினமாகின்றது. தவறு என்று உள்மனம் சில நேரங்களில் குரல் எழுப்பினாலும் மனமானது அக்குற்ற உணர்வைப் போக்க பல்வேறு வாதங்களைத் தனக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு பாராமுகமாக இருக்கவே முனைகின்றது. நாம் அசைவம் உட்கொள்வது நம்மோடு போகட்டும், அடுத்த தலைமுறையினருக்கு எது தர்மம்; எது அதர்மம் என்று அவர்களாகக் கண்டறிந்து உணரும் நல்வாய்ப்பினை வழங்குதல் வேண்டாமா?
ஒரு குழந்தை தான் சுயமாகச் சிந்திக்கும் வயது வரையில் உட்கொள்ளும் மாமிசத்திற்கான பாவச் சுமை முழுவதும் 'ஒன்றுமறியாப் பருவமுதல் அப்பழக்கத்தைத் துவக்கி வைத்த பெற்றோரையே சாரும்' என்று தர்மசாத்திரங்கள் பறைசாற்றுகின்றன. இது சத்திய வாக்கு! இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். குழந்தைகள் மழலை மொழிகளில் 'chilly chicken; fish fry' என்று தாங்கள் உட்கொள்ளும் விவரங்களைத் தெரிவிக்கையில் உள்ளம் பதைக்கின்றது. உண்ணும் உணவானது நம் சிந்தனைப் போக்கின் பெரும் பகுதியைத் தீர்மானிக்கின்றது என்பது 'விஞ்ஞானம்; மெய்ஞானம்' இரண்டுமே அறிவிக்கும் பேருண்மை. பல ஆண்டுகள் புலால் வழக்கம் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தால் பிராணிகள் துடிதுடிப்பதைக் கண்டாலும் கேள்வியுற்றாலும் அது பெரிதான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
குழந்தைகளுக்குச் சிறு துன்பமும் எய்தாமல் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர் தத்தமது 'குழந்தைகளின் ஆன்மாவிற்கு' தங்களையறியாமலே இத்தகு பாவத்தினைத் தேடித் தருவது முறையாகுமா? சாத்திரங்களின் மீதும் ஞானிகளின் வாக்கின் மீதும் அசையாத நம்பிக்கை வைப்போம். நடைமுறைச் சிக்கல்கள் ஆயிரம் இருப்பினும் குழந்தைகளுக்கு அசைவ பழக்கத்தினை உண்டாக்காது அடுத்த தலைமுறையினரை ஜீவகாருண்ய வழியில் செலுத்துவோம் (சிவாய நம).

(உலகப் பொதுமறை):
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்
-
கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் ஒருபொழுதும் கருணை; இரக்கம் இவைகளை எண்ணிப் பார்க்காது; அது போன்று கதியற்ற பிராணிகளின் மாமிசத்தினை உட்கொள்பவரின் மனமும் இரக்கத்தினைக் கொள்ளாது, கருணையைப் போற்றாது!

No comments:

Post a Comment