ஆலய பலியினைக் கண்டிக்கும் அபிராமி பட்டரும் வள்ளலாரும்:

தம்முடைய ஞானத் தமிழால் ஆதிபராசத்தியின் திவ்ய தரிசனம் பெற்று, அம்பிகையின் திருவருளால், அமாவாசையன்று நிலவினைத் தோன்றுமாறு செய்தருளிய தவப்பெறும் குன்றான அபிராமி பட்டர் பின்வரும் திருப்பாடலில் 'ஆலயங்களில் நடந்தேறும் உயிர் பலியினைப் பற்றிய' தம்முடைய கண்டனத்தினைப் பதிவு செய்கின்றார்.

அபிராமி அந்தாதி: திருப்பாடல் 64:
வீணே பலி கவர் தெய்வங்கள்பாற் சென்று மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒரு பொழுதும் திருமேனிப் பிரகாசமன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே!!!
-
சுருக்கமான பொருள்:
சிவபரம்பொருளின் திருத்துணைவியான அபிராமி அன்னையே! கதியற்ற பிராணிகளின் பலியினை ஏற்கும் சிறுதெய்வங்களை அடியவன் எக்காலத்திலும் சென்று வணங்க மாட்டேன். விண்ணிலும் மண்ணிலும் எந்த திசையாகிலும் உன்னுடைய திருவருளின் பெருமையை மட்டுமே போற்றித் துதித்து வணங்குவேன்!!!
அவ்வழியிலேயே வள்ளல் பெருமானார் பின்வரும் திருப்பாடலில், ஆங்காங்கே சிறு தெய்வ ஆலயங்களில் நடந்தேறும் ஆடு; பன்றி; கோழி; கிடாமாடு முதலிய வாயிலாப் பிராணிகளின் பலிகளைக் கண்டுத் தாம் கதறித் துடிதுடிப்பதையும் அஞ்சி நடுங்குவதையும் பெரிதும் வருத்தத்துடன் பதிவு செய்கின்றார்.
-
(திருஅருட்பா: பிள்ளைப்பெரு விண்ணப்பம் - திருப்பாடல் 63):
நலிதரு சிறிய தெய்வமென்று ஐயோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந்துஉள நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில் கண்டகாலத்திலும் பயந்தேன்

ஞானிகள் பதைபதைக்குமாறு ஒரு வாழ்க்கை முறையினை அமைத்துக் கொள்ளும் வரையிலும் பரம்பொருளான இறைவனின் திருவருளை நம்மால் ஒருபொழுதும் பெற்றுவிட இயலாது. இது சத்தியம்! இந்து தர்ம சாத்திரங்கள் ஒருபொழுதும் ஆலய பலியை ஆதரித்தது இல்லை; திருமந்திரம் முதலான தர்ம சாத்திரங்கள் கொல்லாமையை மிகக் கடுமையாக முன்னிறுத்துகின்றன. இக்கண முதல் ஜீவகாருண்யக் கொள்கையினை ஏற்போம்; மாமிசம் உட்கொள்வதை அறவே துறப்போம்; நலமெலாம் பெற்றுச் சிவகதி சேர்வோம்.

No comments:

Post a Comment