புலி மானைக் கொன்று புசிப்பது போல மனிதன் பிராணிகளின் மாமிசம் உண்பதும் உணவுச் சங்கிலியின் ஒரு அங்கமா?

இப்புவியில் பிறக்கும் ஐயறிவு வரையிலான உயிரினங்களுக்கு 'தர்ம அதர்மங்கள் குறித்து அறியச் சாத்தியக் கூறுகள் இல்லை'. மனித இனத்திற்கு மட்டுமே 'அறங்களை கற்றறியவும், அதன்வழி நடந்து உயர் நிலை ஞானமெய்திச் சிவமுத்தி நிலையைப் பெற்றுய்வு பெறவும்' இறைவனால் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது. இக்காரணத்தாலன்றோ தமிழ் மூதாட்டி 'அரிது அரிது மானிடராதல் அரிது' என்று அறிவுறுத்திச் சென்றாள். பிற உயிரினங்களுக்கு 'இது சரி; இது தவறு' என்று பகுத்தறியும் திறனில்லாத காரணத்தால் அவைகள் புரியும் செயல்களுக்குப் பாவ புண்ணிய வினைகள் வந்தெய்துவதில்லை.

சிறிது விரிவுபடுத்திச் சிந்திப்போம், மனிதனாய் பிறப்பெடுக்கும் ஒரு ஆன்மாவிற்கு மூன்று வினைகள் உண்டு, இது வரையில் பலகோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள சஞ்சித வினை, இப்பிறவியில் அனுபவிக்கும் பொருட்டு எடுத்து வந்துள்ள பிராரப்த வினை, இப்பிறவியில் சேர்க்கும் புது வினைகளான ஆகாம்ய வினை. அதே ஆன்மா ஐயறிவு வரையிலான உயிரினமாகப் பிறப்பெடுக்கையில் அதற்கு முதல் இரண்டு வகை வினைகள் மட்டுமே உண்டு. ஒரு எளிய உலகியல் உதாரணம், சாலை விதியினை மீறிச் செல்லும் ஆடு மாடுகளை போக்குவரத்து அதிகாரிகளால் தண்டிக்க இயலாது, அவைகளை விலக்க மட்டுமே இயலும். ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் சாலை விதிகளை மீறும் பொழுது தண்டனைக்கு உள்ளாக்கப் படுகின்றான்.
மானிட இனம் தர்மங்களை எளிதில் உணர்ந்து உய்வுபெறும் பொருட்டு பரம்பொருளான இறைவன் வேதங்கள்; புராணங்கள்; உபநிடதங்கள்; இதிகாசங்கள்; சாத்திரங்கள் இவைகளை ரிஷிகள்; ஞானிகள்; அருளாளர்கள்; ஆச்சாரியர்கள் மூலம் இயற்றுவிக்கின்றான். இத்தகு சாத்திரங்கள் மூலம் அறங்களை அறிவதை விடுத்து, மிருகங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து 'தர்மங்களையும், படைப்பின் விதிகளையும் வகுத்துக் கொள்வது' மிகவும் பிழையானது. ஒவ்வொரு முறை அசைவம் உட்கொள்ளும் பொழுதும் அவ்வுயிரினத்திடம் நம்மை அறியாமலே கடன் பட்டு விடுகின்றோம்.

அக்கடன் மென்மேலும் நம்மைப் பற்பல பிறவிகளில் ஆட்படுத்தித் துன்புறுத்துகின்றது. இனி 'மாம்சா' எனும் வடமொழி சொல்லின் உட்பொருளினை ஆய்வோம், 'மாம்' என்பது 'நான்' என்றும் 'சா' என்பது 'நீ' என்றும் பொருள்படும். 'இன்று நான் உன்னைத் துன்புறுத்தி உண்கின்றேன், அடுத்து வரும் பிறவிகளில் நீ இதே முறையில் என்னைக் கொன்று புசிப்பாய்' எனும் உடன்படிக்கையே அச்சொல்லின் பொருள். புலி சிங்கங்களிடமிருந்து 'தர்ம - அதர்ம' பாடம் பயில்வதை விடுத்து மனித இனத்திற்குரிய தர்மத்தைப் பின்பற்றுவோம். நல்லதோர் வீணையான இவ்வரிய மனிதப் பிறவியை 'பிற உயிர்களைக் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொன்று புசிப்பதன் மூலம்' புழுதியில் எறியாது 'நல் அறங்களைப் பின்பற்றி உய்வு பெறுவோம்'.

உண்ணாமை வேண்டும் புலால் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின் (புலால் மறுத்தல்: திருக்குறள்).
-
பொருள் (மு.வரதராசனார் உரை):
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

No comments:

Post a Comment