யார் ஞானி? யார் ஞானியில்லை? வள்ளலாரின் அதிஅற்புத விளக்கம்:

திருஅருட்பா - 2ஆம் திருமுறை - அறநிலை விளக்கம்:

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணையுற இரங்காது உயிருடம்பைக் கடிந்துண்ணும் கருத்தனேல்எம்
குருவாணை எமதுசிவக்கொழுந்தாணை ஞானிஎனக் கூறொணாதே!!!

பொருள்:
கண நேரத்தில் ஆணொருவரைப் பெண்ணாகவும், உருமாறிய அப்பெண்ணினை மீண்டும் முந்தைய ஆண் உருவத்தினாராகவும், இறந்தவரை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்யும் வல்லமை பெற்றவராகவும் இருப்பினும், பிற உயிரினங்களின் கடும் துன்பம் கண்டு இரங்காது அவற்றின் மாமிசத்தைச் சுவைத்துண்ணும் கருத்துடையவராக இருப்பின் அத்தகையோரை ஞானியென்று எவ்விதப் பரிமாணத்தினாலும் கூறுவது பொருந்தாது (அவர்கள் ஒரு பயனுமற்ற வெற்றுச் சித்து புரிபவரேயாவர்). இது எமது குரு மற்றும் எமை ஆட்கொண்டருளிய சிவபரம்பொருளின் மீது ஆணை (ஜீவகாருண்யத்தினை உறுதியாகக் கொள்ளாதவற்கு ஒரு பொழுதும் சிவஞானம் சித்திக்காது என்பது இத்திருப்பாடலின் இறுதி முடிவு).

(குறிப்பு: பரம குருநாதரான திருமுருக வாரியார் சுவாமிகள் மேற்குறித்துள்ள வள்ளல் பெருமானின் திருப்பாடலினைத் தம்முடைய பல விரிவுரைகளிலும் சிலாகித்துக் கூறியுள்ளார்).

No comments:

Post a Comment