தாவர உணவினை உண்பது மட்டும் ஜீவ ஹிம்சை ஆகாதா? வள்ளல் பெருமானார் மற்றும் திருமுருக வாரியார் சுவாமிகளின் விளக்கங்கள்:

(திருமுருக வாரியார் சுவாமிகளின் 'குமுதம் வினாவிடை' தொகுப்பிலிருந்து):

"நெல் முதலிய தானியங்கள் உயிர் தோன்றும் உடம்பேயன்றி அவை உயிராக மாட்டா. ஒரு முருங்கை மரத்தின் கிளையை வெட்டி நாலு துண்டுகளாக்கி, நான்கு இடத்தில நட்டால் நான்கு முருங்கை மரங்களாக ஆகிவிடும். அது போல், ஓர் ஆட்டுக் காலை வெட்டி நான்காகத் துண்டித்து நாலு இடத்தில நட்டால் நான்கு ஆடுகளாக ஆவதில்லை. ஆகவே புலால் உணவுக்கும் மரக்கறி உணவிற்கும் நிரம்ப வேற்றுமை உண்டு.
செடி கொடிகளை வேருடன் பிடுங்குவதில் சிறிது பாவமுண்டு. ஆடு, கோழி முதலிய உயிர்கள் ஐயறிவுப் பிராணிகள். செடி கொடிகள் ஓரறிவு உயிரினங்கள். ஆடு கோழிகளை வெட்டுகின்ற பொது அவை கதறித் துடிக்கின்றன. காய்கறிகளை எடுப்பது பாவமாகாது. அது நமக்கு நகமும் முடியும் அகற்றுவது போல். ஆதலினால் அவைகளை அதிதிகளுக்கு இட்டு மிகுதியை உண்ணுதல் வேண்டும்".

(இராமலிங்க வள்ளலாரின் விளக்கம்: ஜீவ காருண்ய ஒழுக்கம்: முதற் பிரிவு): 

மரம் புல் நெல் முதலான ஜீவர்கள் ஸ்பரிசமென்கிற ஓரறிவையுடைய ஜீவர்களாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக் கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களிடத்து உயிரில்லாமல் ஆனால் உயிர் தோன்றுவதற்கு இடமான ஜடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாத படியாலும், நகம் ரோமம் முதலியவைகளை வாங்கும் போது எவ்விதம் இம்சை உண்டாவதில்லையோ அது போல்  அவைகளுக்கு இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணங்கள் விருத்தியில்லாத படியாலும் அது உயிர்க் கொலையுமல்ல; துன்பம் உண்டு பண்ணுவதுமல்ல; அதனால் அது ஜீவகாருணிய விரோதமாகாது.
(விதையாகிய) வித்துக்களில் ஜீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே இருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே என்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆதலின் வித்துக்களைச் ஜடம் என்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படியென்னில்:- நிலத்திற் கலந்த விதைக்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன என்று அறிய வேண்டும்.
(விதையாகிய) வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் ஜடமல்ல. ஆதலால், முளைகளைப் பிடுங்கப் படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும். வித்து காய் கனி முதலியவற்றில் தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை, ஆதலின் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது ஜீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.

No comments:

Post a Comment